கோலி, தினேஷ் கார்த்திக் அவுட்.. 9 விக்கெட்டுகளை இழந்து திணறல்!! தோல்வியின் விளிம்பில் இந்திய அணி
இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 287 ரன்களும் இந்திய அணி 274 ரன்களும் எடுத்தது. முதல் இன்னிங்ஸில் விராட் கோலி தனி நபராக போராடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார்.
13 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, அஷ்வின் சுழலில் முதல் மூன்று விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. அதன்பிறகு அடுத்த நான்கு விக்கெட்டுகளை இஷாந்த் சர்மா வீழ்த்தினார். இஷாந்த் சர்மாவின் ஒரே ஓவரில் பேர்ஸ்டோ, ஸ்டோக்ஸ், பட்லர் ஆகிய மூவரும் ஆட்டமிழந்தனர். இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இரண்டாவது இன்னிங்ஸில் 180 ரன்களுக்கே இங்கிலாந்து அணி ஆல் அவுட்டானது.
இதையடுத்து 194 ரன்கள் என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் முரளி விஜய், தவான், ராகுல், ரஹானே ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். அஷ்வின் 13 ரன்களில் அவுட்டானார்.
முதல் இன்னிங்ஸை போலவே ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் விராட் கோலி நிலைத்து ஆடிவருகிறார். விராட் கோலியும் தினேஷ் கார்த்திக்கும் ஆடிவருகின்றனர். மூன்றாம் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில், இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 43 ரன்களுடனும் தினேஷ் கார்த்திக் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்றைய ஆட்டம் தொடங்கியதும் முதல் ஓவரிலேயே தினேஷ் கார்த்திக் அவுட்டானார். அதன்பிறகு கோலியுடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். அரைசதம் கடந்த கோலி 51 ரன்களில் ஸ்டோக்ஸின் பந்தில் வெளியேறினார்.
இந்திய அணி 154 ரன்களுக்கு 9 விக்கெட்டை இழந்துவிட்டது. வெற்றிக்கு இன்னும் 40 ரன்கள் தேவைப்படுகிறது. ஆனால் இங்கிலாந்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினால் போதும் என்பதால் இந்திய அணி தோல்வியின் விளிம்பில் இருக்கிறது.