அடித்தது லக்கி பிரைஸ்…. விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு 3 சதவீதமாக உயர்வு… எடப்பாடி அதிரடி !!
அரசு வேலை வாய்ப்புகளில் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு 3 சதவீதமாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.
அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர் களுக்கு 2 சதவீத உள்ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று கடந்த ஆகஸ்டு 15-ந் தேதி நடந்த சுதந்திர தின விழாவின் போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதையடுத்து விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பை உருவாக்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் மற்றும் அனைத்து விளையாட்டு சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
விழாவில் பேசிய முதலாமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,கூடைப்பந்து மற்றும் கைப்பந்து விளையாட்டினை ஊக்குவிக்கும் வகையில் திருச்சி, திருவண்ணாமலை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் கால்வாலியம் செயற்கை தகடுகளாக மேற்கூரை வசதியுடன் கூடிய கூடைப்பந்து மற்றும் கைப்பந்து விளையாட்டு மைதானங்கள் அமைக்க ஆணையிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்..
விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில், குறிப்பிட்ட பதவிகளில் தகுதியின் அடிப்படையில் 2 சதவீதம் வரை உள் ஒதுக்கீடாக விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எனது சுதந்திர தின உரையில் அறிவித்து, அதனை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் முதல்கட்டமாக, தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு உயர்மட்டக்குழு அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தற்போது வேலைவாய்ப்பில் உள்ள 2 சதவீதமான உள் ஒதுக்கீடு 3 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.