கடைசில கங்குலி சொன்னதுதான் நடக்கப்போகுது!!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் அணியில் ராயுடுவிற்கு பதிலாக ரஹானே சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என கங்குலி கருத்து தெரிவித்திருந்தார். தற்போது கங்குலியின் கருத்து உண்மையாகும் நிலை உருவாகியுள்ளது.
ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடிய ராயுடுவிற்கு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் அணியில் இடம் கிடைத்தது. ஆனால், இங்கிலாந்தில் நல்ல ரெக்கார்டை வைத்திருக்கும் ரஹானேவிற்கு இடம் அளிக்கப்படவில்லை.
இதுதொடர்பான அதிருப்தியை அணி வீரர்கள் பட்டியல் வெளியானபோதே முன்னாள் கேப்டன் கங்குலி வெளிப்படுத்தியிருந்தார். ராயுடுவை காட்டிலும் இங்கிலாந்தில் ரஹானேவால் சிறப்பாக ஆடமுடியும். எனவே ரஹானே நிராகரிக்கப்பட்டிருப்பது கடினமான முடிவு. என்னுடைய தேர்வு ரஹானே தான் என கங்குலி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அவருடைய கருத்து நிஜமாகக்கூடிய நிலை உருவாகியுள்ளது. இங்கிலாந்து தொடருக்கு தேர்வான வீரர்களின் உடற்தகுதியை பரிசோதிக்க நடத்தப்பட்ட யோ யோ டெஸ்டில் ராயுடு தேர்ச்சி பெறவில்லை. அதனால் அவர் இங்கிலாந்து தொடரிலிருந்து விலகியுள்ளார்.
இதையடுத்து அவருக்கு பதிலாக வேறு ஒரு வீரர் சேர்க்கப்பட வேண்டும். அந்த வாய்ப்பு ரஹானேவிற்கு கிடைப்பதற்கான வாய்ப்பு தான் அதிகம். இங்கிலாந்தில் இதுவரை சிறப்பாக ஆடி நல்ல ரெக்கார்டுகளை வைத்துள்ள ரஹானே தான் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.