இங்கிலாந்து அணிக்கு எதிராக எப்படி ஆடணும்..? இந்திய அணியை முறுக்கேற்றும் காம்பீரின் அறிவுரை
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முடிவுகளை பற்றி கவலைப்படாமல் நம்பர் 1 அணி என்ற மனநிலையுடன் நம்பிக்கையுடன் ஆட வேண்டும் என காம்பீர் ஆலோசனை கூறியுள்ளார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தொடங்குகிறது. கடந்த 2011 மற்றும் 2014ம் ஆண்டுகளில் இங்கிலாந்திடம் அடைந்த தோல்விக்கு, இந்த தொடரில் வென்று பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.
இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் 125 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி 97 புள்ளிகளுடன் 5ம் இடத்தில் உள்ளது.
இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், இதுகுறித்து காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய காம்பீர், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் முடிவுகளை பற்றி கவலைப்படாமல், டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணி என்ற மனநிலையுடன் இந்திய வீரர்கள் ஆட வேண்டும். நீங்கள் ஆடிக்கொண்டிருப்பது நம்பர் 1 அணிக்கு எதிராக என்பதை இங்கிலாந்துக்கு இந்திய அணி புரியவைக்க வேண்டும் என காம்பீர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ராகுல் மற்றும் முரளி விஜயும் 3ம் வரிசையில் புஜாராவும் களமிறங்கலாம் என தெரிவித்துள்ளார். தற்போது இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரர்களாக தவான் - முரளி விஜய் களமிறங்கிவருவது குறிப்பிடத்தக்கது.