அவரே முடியாதுனு சொல்லிட்டாரு.. நான் மட்டும் எப்படி வருவேன்..? அமைச்சரின் கோரிக்கையை நிராகரித்த முரளிதரன்
இலங்கை கிரிக்கெட்டின் ஆலோசராக பணியாற்ற வருமாறு அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் விடுத்த கோரிக்கையை சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் நிராகரித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசகர்களாக இணைந்து பணியாற்ற, அந்நாட்டு அணியின் முன்னாள் வீரர்களான அரவிந்த டி சில்வா, சங்ககரா, ஜெயவர்த்தனே, முரளிதரன் ஆகியோருக்கு அந்நாட்டு விளையாட்டு துறை அமைச்சர் ஃபைஸர் முஸ்தபா கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால் ஜெயவர்த்தனே மறுத்துவிட்டார். மறுத்ததற்கான காரணத்தையும் அவர் தெரிவித்திருந்தார். இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் ஒரு ஆண்டும், சிறப்பு ஆலோசனைக் குழுவில் ஆறு மாதமும் இருந்தபோது, தான் வழங்கிய எந்த பரிந்துரையும் ஏற்கப்படவில்லை. அதனால் இந்த கிரிக்கெட் அமைப்பு மீது தனக்கு நம்பிக்கை இல்லை என கோபத்துடன் கூறியிருந்தார்.
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசகராக ஜெயவர்த்தனே மறுத்த நிலையில், முன்னாள் சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரனும் மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சருக்கு முரளிதரன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், இலங்கை அணி வெற்றி பெற்று கொண்டிருந்த சமயத்தில் முன்னாள் வீரர்களை கலந்து ஆலோசிக்காமல், அணி மோசமான நிலையில் உள்ளபோது அழைப்பது வருந்தத்தக்கது. இது நேர்மையற்ற தந்திரமான நடவடிக்கை என கருதுகிறேன். இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் ஏற்கனவே பொறுப்பில் இருந்த ஜெயவர்த்தனே, இந்த அமைப்பின் மீது நம்பிக்கை இல்லை என தனது அனுபவத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார். ஜெயவர்த்தனேவின் கருத்தின் அடிப்படையில் நானும் ஆலோசகராக வர மறுக்கிறேன் என முரளிதரன் தெரிவித்துவிட்டார்.