ஆரம்பத்தில் அடித்து நொறுக்கிய இங்கிலாந்து.. இரண்டாம் பாதியில் விக்கெட்டுகளை சரித்த இந்தியா!! ராயின் அதிரடியால் கடின இலக்கு
ஜேசன் ராய், ஜோஸ் பட்லரின் அதிரடியால் இங்கிலாந்து அணி 198 ரன்களை குவித்தது.
இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய அணியும் இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன.
இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமமான நிலையில், தொடரை வெல்லும் முனைப்பில் இரு அணிகளும் மூன்றாவது போட்டியில் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பவுலிங் செய்ய விரும்பியதால், இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் பட்லர் அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். பவர்பிளே ஓவர்களில் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். 8 ஓவரில் அணியின் ஸ்கோர் 94ஆக இருந்தபோது 34 ரன்களில் பட்லரை சித்தார்த் கவுல் போல்டாக்கினார்.
ஜேசன் ராய் 67 ரன்கள் குவித்து அவுட்டானார். 13.4 ஓவரில் இங்கிலாந்து அணி 134 ரன்கள் குவித்திருந்தபோது இயன் மோர்கன் 6 ரன்களில் வெளியேறினார். அதன்பிறகு பென் ஸ்டோக்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ், பேர்ஸ்டோ ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இதையடுத்து 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களை குவித்தது. ஆட்டத்தின் முதல் பாதியில் இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தியது; ஆனால் இந்திய பவுலர்களின் சிறப்பான பந்துவீச்சால் இரண்டாம் பாதியில் இந்திய அணி போட்டிக்குள் வந்தது.
199 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய வீரர்கள் ஆடி வருகின்றனர்.