ஜோ ரூட் அபார சதம்!! இந்திய அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த இங்கிலாந்து
இந்தியா இங்கிலாந்து இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நடந்துவருகிறது. முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில், இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணியும் இந்தியாவிற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இங்கிலாந்தும் களம் கண்டுள்ளன.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோர் கடந்த போட்டியை போலவே ஓரளவிற்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். பேர்ஸ்டோ 38 ரன்களிலும் ராய் 40 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருவரையுமே குல்தீப் யாதவ் ஆட்டமிழக்க செய்தார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ஜோ ரூட், இயன் மோர்கன் சிறப்பாக ஆடினர். இருவருமே நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். அரைசதம் கடந்த இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன், 53 ரன்களில் குல்தீப்பின் பவுலிங்கில் வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மோயின் அலியும் 13 ரன்களில் அவுட்டானார்.
பிறகு களத்திற்கு வந்த டேவிட் வில்லி, கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி இங்கிலாந்து அணியின் ரன் உயர்விற்கு உதவினார். ஜோ ரூட் பொறுப்பாக ஆடி சதமடித்தார். கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய வில்லி, 30 பந்துகளில் அரைசதம் கடந்தார். 50 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 322 ரன்களை குவித்தது.
323 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி ஆடிவருகிறது.