இப்படி செய்வது ஆட்டத்தை பேரழிவுக்கு கொண்டுச்செல்லும் - சொன்னது கிரிக்கெட் ஜாம்பவான்...
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஒவ்வொரு இன்னிங்சிலும் இரண்டு புதிய பந்துகளை பயன்படுத்துவது ஆட்டத்தை பேரழிவுக்கு கொண்டுச் செல்வதற்குரிய அறிகுறி என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்தது, இதில், இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 481 ஓட்டங்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்தது.
இந்தப் போட்டியில் பந்து வீச்சாளர்களால் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. 2011–ஆம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டியில் ஒவ்வொரு இன்னிங்சிலும் இரண்டு புதிய பந்துகளை பயன்படுத்தலாம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) விதிமுறையில் திருத்தம் செய்தது. இதனால் தற்போது ஒருநாள் போட்டியில் 400 ஓட்டங்கள் குவிப்பது எளிதாகிவிட்டது.
ஒரு நாள் போட்டியில் செய்யப்பட்ட இந்த விதிமுறை மாற்றத்துக்கு தெண்டுல்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து தெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்கத்தில், "ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஒவ்வொரு இன்னிங்சிலும் இரண்டு புதிய பந்துகளை பயன்படுத்துவது ஆட்டத்தை பேரழிவுக்கு கொண்டுச் செல்வதற்குரிய சரியான அறிகுறியாகும்.
ஒவ்வொரு பந்தும் தேய்ந்து பந்து வீச்சாளர்கள் ஸ்விங் செய்வதற்கும், சுழல விடுவதற்கும் அதிக நேரம் பிடிக்கும். இதனால் ரிவர்ஸ் ஸ்விங்கையும், ஓட்டங்களை விட்டுக் கொடுக்காத கடைசி கட்ட ஓவர்களையும் நம்மால் நீண்ட காலமாக பார்க்க முடியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.