மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை – பாஜக எம்பி மீதான தீர்ப்பு 26ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு!
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது தொடர்பாக வரும் 26 ஆம் தேதி தனது உத்தரவை டெல்லி நீதிமன்றம் அறிவிக்க உள்ளது.
![Delhi Court Adjournment to the 26th after Brij Bhushan Singh filed a petition demanding an inquiry in sexual harassment case rsk Delhi Court Adjournment to the 26th after Brij Bhushan Singh filed a petition demanding an inquiry in sexual harassment case rsk](https://static-ai.asianetnews.com/images/01gq4fz8jztf6xp9pbjqp5a42r/bjp-mp-brij-bhushan-singh-accused-_363x203xt.jpg)
மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்தல் பாலியல் புகார் வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக நடைபெற்று வந்த வழக்கில் இன்று அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க இருந்த நிலையில், கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் (ஏசிஎம்எம்) பிரியங்கா ராஜ்பூட், இந்த விவகாரத்தில் மேலும் விசாரணை கோரி நீதிமன்றத்தில் சிங் மனு அளித்ததைத் தொடர்ந்து வரும் 26 ஆம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்திவைத்தார்.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மேலும், அவரை கைது செய்யக் கோரியும் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, அவர் மல்யுத்த சம்மேளன தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டு புதிய தலைவர் அறிவிக்கப்பட்டார்.
இதில், பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் ஆதரவாளரான சஞ்சய் சிங், இந்திய மல்யுத்த சம்மேள தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கு மல்யுத்த வீராங்கனைகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, 2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாக்ஷி மாலிக் மல்யுத்த விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதே போன்று மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தான் பெற்ற பத்மஸ்ரீ விருதையும் திரும்ப அளிப்பதாக பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பினார். நீதி கிடைக்கும் வரையில் அதனை திரும்ப பெறப்போவதில்லை என்றும் கூறினார்.
இந்த நிலையில் தான் சிங்கிற்கு எதிரான வழக்கு இன்று டெல்லி நீதிமன்றத்தில் நடந்தது. அவர் மீது விசாரணையைத் தொடர்ந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய இருந்த நிலையில் அவர் சிங், இந்த வழக்கு தொடர்பாக மேலும் விசாரணை கோரி மனு அளித்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கின் தீர்ப்பை வரும் 26 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
மேலும், சிங் தாக்கல் செய்த மனுவில், WFI அலுவலகத்தில் தான் துன்புறுத்தப்பட்டதாக புகார் அளித்த ஒரு சம்பவத்தின் தேதியில் அவர் இந்தியாவில் இல்லை என்று கூறி, குற்றச்சாட்டுகள் தொடர்பாக மேலும் சமர்ப்பிப்பதற்கும், மேலும் விசாரணை செய்வதற்கும் சிங் கால அவகாசம் கோரினார்.
இது குறித்து பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் வழக்கறிஞர் கூறியிருப்பதாவது; குற்றம் சாட்டப்பட்ட தேதியில் சிங் இந்தியாவில் இல்லை. சிங், இந்தப் பிரச்சினையை விசாரிக்க டெல்லி காவல்துறைக்கு வழிகாட்டுதலைக் கோருகிறார். குற்றம் சாட்டப்பட்ட தேதிகள் தெளிவாக இல்லை. தன் மீது குற்றம் சாட்டப்படும்போது நான் அங்கு இல்லை என்றால், எனது அலிபி மனு உள்ளே வரும் என்று வழக்கறிஞர் வாதிட்டார்.