ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் ஒட்டுமொத்தமாக ரத்து..?
ஒலிம்பிக் போட்டிகள் இந்தாண்டு கோடைகாலத்தில் நடப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது என்பதை ஜப்பான் அமைச்சரின் பேச்சு பறைசாற்றுகிறது.
கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் மார்ச் முதல் ஜூலை வரை அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டன அல்லது ரத்து செய்யப்பட்டன. அந்தவகையில் அந்த காலக்கட்டத்தில் ஜப்பானின் டோக்கியோவில் நடப்பதாக திட்டமிடப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகளும், கொரோனாவால் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டன.
எனவே இந்த ஆண்டு கோடைகாலத்தில் டோக்கியோவில் ஒலிம்பிக் நடப்பது சந்தேகம் தான். இன்னும் கொரோனா முற்றிலும் ஒழியாத நிலையில், கோடையில் ஒலிம்பிக்கை திட்டமிட்டபடி நடத்தலாமா என்று ஜப்பான் மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில், 77 சதவிகிதத்தினர், ஒலிம்பிக்கை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜப்பான் அமைச்சர் டாரோ கோனோ, இப்போதைக்கு ஒலிம்பிக்கை நடத்துவதற்கான தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் ஒலிம்பிக் திட்டமிட்ட காலத்தில் நடக்கலாம்; நடக்காமலும் போகலாம். ஆனால் ஒலிம்பிக்கை நடத்துபவர்கள் என்ற முறையில் நாம்(ஜப்பான்) எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று அமைச்சர் டாரோ தெரிவித்துள்ளார்.