கிரிக்கெட் சங்கங்கள் தேர்தல் நடத்த தடை - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
மாநில கிரிக்கெட் சங்கங்கள் தேர்தல் நடத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) வரைவு அரசமைப்பு விதிகளை இறுதி செய்யும் விவகாரத்தில் தீர்ப்பு வழங்கும் வரை மாநில கிரிக்கெட் சங்கங்கள் தேர்தல் நடத்த தடை விதிக்கப்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. இந்த நிலையில், மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக எந்தவொரு மனுவையும் உயர் நீதிமன்றங்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் அந்த உத்தரவில், "ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்குரிமை', "பிசிசிஐ அதிகாரிகள் இருவேறு பதவிகளை வகிப்பதற்கு இடையேயான இளைப்பாறும் காலம்' ஆகிய விவகாரங்களில் முன்பு பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்வதை கருத்தில் கொண்டுள்ளதாகவும் அந்த அமர்வு கூறியுள்ளது.