ஆசிய அளவில் தங்கம் வென்றார் 'தமிழ்மகள்' அனுராதா..!
நேபாள நாட்டில் நடந்து வரும் தெற்காசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் தமிழக வீராங்கணை அனுராதா தங்கம் வென்றுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அனுராதா. காவல்துறை உதவி ஆய்வாளராக தஞ்சாவூர் மாவட்டம் மருவூர் கிராமத்தில் பணியாற்றி வருகிறார். விளையாட்டு வீராங்கணையான இவர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வாங்கி குவித்திருக்கிறார்.
இதனிடையே தற்போது தெற்காசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் நேபாள நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்தியா சார்பாக பல போட்டியாளர்கள் குழுவாக கலந்து கொண்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து பளு தூக்கும் போட்டியில் அனுராதாவும் பங்கேற்று இருந்தார். பெண்கள் பளு தூக்கும் போட்டியில் 87 கிலோ எடைப்பிரிவில் 200 கிலோ எடை தூக்கும் போட்டியில் அனுராதா வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தைச் தட்டிச்சென்றார்.
அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இதற்கு முன்பாக காமென்வெல்த் போட்டியில் பங்கேற்று அவர் தங்கம் வென்றிருந்தார். தமிழ்நாடு சார்பாக தெற்காசிய அளவில் நடக்கும் போட்டியில் பெண்கள் பிரிவில் தங்க பதக்கம் கிடைத்திருப்பது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.