12 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியின் இந்நாள், முன்னாள் கேப்டன்களுக்கு இப்படி ஒரு ஒற்றுமையா?
12 ஆண்டுகளுக்கு பிறகு இந்நாள், முன்னாள் கேப்டன்களுக்கு இப்படி ஒரு ஒற்றுமை ஏற்பட்டுள்ளது. அயர்லாந்து அணியுடன் இரண்டு டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல், டி20 போட்டியில் இந்திய அணி, 76 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிபெற்றது. இந்திய அணி விளையாடிய இந்த 100-வது டி20 போட்டியில் கேப்டன் விராட் கோலி 2 பந்துகளை சந்தித்த நிலையில் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். இதேபோல் 100-வது போட்டியில் விராட் கோலி அடித்த ரன்களை தான் முதல் டி20 போட்டியில் முன்னாள் கேப்டன் தோனி அடித்திருந்தார். வீரேந்திர சேவாக் தலைமையிலான இந்திய அணி தனது முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது. ஜோகன்னஸ்பர்க் நகரில் 2006-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்தது.
பின்னர் விளையாடிய இந்திய அணி 19.5 ஓவர்களில் 127 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் தோனி 2 பந்துகளை சந்தித்த அவர் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். இந்திய அணியின் டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்நாள், முன்னாள் கேப்டன்களுக்கு இடையே 12 ஆண்டுகளுக்கு பிறகு இப்படியொரு ஒற்றுமை ஏற்பட்டுள்ளது.
டி20 கிரிக்கெட்டில் 2000 ரன்களை கடக்க விராட் கோலிக்கு இன்னும் 17 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. இந்தியா, அயர்லாந்து அணிகளுக்கு இடையில் இன்று நடைபெறும் இரண்டாவது டி20 போட்டியில் கோலி 2000 ரன்களை எட்டுவார் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.