பாகிஸ்தான் வீரருக்கு தடை.. பாக்., கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கை
பாகிஸ்தான் வீரர் உமர் அக்மலுக்கு கிரிக்கெட் ஆட இடைக்கால தடை விதித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் சர்ச்சைகளுக்கு பெயர்போனவர். பாகிஸ்தான் அணிக்காக 16 டெஸ்ட், 121 ஒருநாள் மற்றும் 84 டி20 போட்டிகளில் ஆடியுள்ள உமர் அக்மல், கடந்த சில தொடர்களில் பாகிஸ்தான் அணியில் ஆடவில்லை. ஒருநாள் அணியில் ஓராண்டாக ஆடவில்லை. டி20 அணியில் கடந்த ஆண்டு நடந்த இலங்கைக்கு எதிரான தொடரில் கடைசியாக ஆடினார்.
அண்மையில் ஃபிட்னெஸ் டெஸ்ட்டின்போது, ட்ரெய்னரிடம் ஆடையை கழட்டிவிட்டு, உடம்பில் எங்கே கொழுப்பு இருக்கிறது என்று உமர் அக்மல் கேட்டது கடும் சர்ச்சையானது. உமர் அக்மலின் அநாகரிகமான செயல்பாடு கடும் விமர்சனத்துக்குள்ளானது.
இன்று, பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் தொடங்கவுள்ள நிலையில், உமர் அக்மலுக்கு கிரிக்கெட் ஆட இடைக்கால தடை விதித்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு. கனடா பிரீமியர் லீக்கில் மேட்ச் ஃபிக்ஸிங்கில் உமர் அக்மல் ஈடுபட்டதாக எழுந்த புகாரை, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு விசாரித்து வருகிறது. இந்நிலையில், அதை சுட்டிக்காட்டி, அந்த விசாரணை முடியும் வரை உமர் அக்மல் கிரிக்கெட் ஆடக்கூடாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.
இன்று பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடங்கவுள்ள நிலையில், அவருக்கு தடை விதிக்கப்பட்டதால், அவரால் இந்த லீக் தொடரில் ஆடமுடியாமல் போனது. நடப்பு சாம்பியனான குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியில் இருந்த உமர் அக்மல், இந்த தொடரில் ஆடமுடியாது.