கடந்த 20 ஆண்டுகளில் விளையாட்டு துறையின் சிறந்த தருணம்.. லாரியஸ் விருதை வென்றார் சச்சின் டெண்டுல்கர்
2011 உலக கோப்பை இறுதி போட்டியில் வென்றதும், இந்திய வீரர்கள் சச்சின் டெண்டுல்கரை தோளில் சுமந்து சென்றதுதான் கடந்த 20 ஆண்டில் விளையாட்டுத்துறையின் சிறந்த தருணமாக தேர்வு செய்யப்பட்டு அதற்கான விருதை சச்சின் டெண்டுல்கர் பெற்றுக்கொண்டார்.
சச்சின் டெண்டுல்கர் 1992 உலக கோப்பையிலிருந்து 2011 உலக கோப்பை வரை மொத்தம் 6 உலக கோப்பைகளில் ஆடினார். 1992, 1996, 1999, 2003, 2007 ஆகிய 5 உலக கோப்பைகளில் ஆடியும், தான் ஆடிய காலத்தில் இந்திய அணிக்கு உலக கோப்பையை வென்று கொடுக்க முடியாத வேதனையில் இருந்த சச்சின் டெண்டுல்கருக்கு 2011 உலக கோப்பை, அந்த வேதனையை தீர்த்து வைத்தது.
தோனி தலைமையிலான இந்திய அணி, 2011ல் இந்தியாவில் நடந்த உலக கோப்பையை வென்றது. கிரிக்கெட் உலகின் ஆல்டைம் ஜாம்பவான், ரசிகர்களால் கிரிக்கெட் கடவுள் என்றழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் சொந்த மண்ணான மும்பையில் ஃபைனல் நடந்தது. அந்த ஃபைனலில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி இரண்டாவது முறையாக உலக கோப்பையை வென்றது.
அந்த உலக கோப்பையை சச்சின் டெண்டுல்கருக்கு சமர்ப்பிக்கும் விதமாக, இந்திய வீரர்கள் அவரை கௌரவப்படுத்தினர். இந்திய அணி உலக கோப்பையை வென்றதும், இந்திய வீரர்கள் சச்சின் டெண்டுல்கரை தங்களது தோள்களில் சுமந்துகொண்டு மும்பை வான்கடே மைதானத்தை வலம்வந்தனர்.
அந்த தருணம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் காலத்துக்கும் மறக்கமுடியாத சம்பவம். Laureus Sporting Moment 2000-2020ல் அந்த தருணமும் நாமினேட் ஆகியிருந்த நிலையில், அதிகமான வாக்குகளை பெற்று சச்சின் டெண்டுல்கர் தான் லாரியஸ் விருதை வென்றார்.
சச்சின் டெண்டுல்கருக்கு அந்த லாரியஸ் விருதை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் வழங்கினார். லாரியஸ் விருதை வென்ற சச்சின் டெண்டுல்கர், இதுகுறித்து பேசும்போது, நாட்டில் உள்ள அனைவருக்கும் எந்தவித மாற்று கருத்துமில்லாத சிறப்பான தருணம் என்றால், அது உலக கோப்பையை வென்ற தருணமாகத்தான் இருக்கும். யாருக்குமே மாற்றுக்கருத்து இல்லாத ஒரு தருணம் அமைவது மிகவும் கடினம். நாடே ஒன்றிணைந்து ஒரு விஷயத்தை கொண்டாடுவது வியப்பான விஷயம். அதுதான் விளையாட்டின் பவர் என்றார் சச்சின் டெண்டுல்கர்.