ஐபிஎல்லில் புறக்கணிக்கப்பட்ட கடுப்பில் செமயா பேட்டிங் ஆடி முச்சதம் அடித்து அசத்திய பேட்ஸ்மேன்
ரஞ்சி தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்கால் வீரர் மனோஜ் திவாரி முச்சதமடித்து அசத்தியுள்ளார்.
மனோஜ் திவாரி தொடர்ச்சியாக இந்திய அணியிலும் ஐபிஎல்லிலும் புறக்கணிக்கப்பட்டுவருகிறார். கடந்த ஐபிஎல் சீசனில் புறக்கணிக்கப்பட்ட திவாரி, அண்மையில் நடந்த அடுத்த சீசனுக்கான ஏலத்திலும் புறக்கணிக்கப்பட்டார். தான் வேண்டுமென்றே புறக்கணிப்படுவதை அறிந்து, அவ்வப்போது அதிருப்தியையும் வெளிப்படுத்திவந்தார் மனோஜ் திவாரி.
இந்நிலையில், ஹைதராபாத் அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் அபாரமாக ஆடி முச்சதமடித்துள்ளார். முதல் நாளான நேற்றைய ஆட்ட முடிவில் 156 ரன்களுடன் களத்தில் இருந்த மனோஜ் திவாரி, இன்றைய ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்து, தொடர்ந்து சிறப்பாக ஆடி முச்சதமும் அடித்தார். ஒருமுனையில் மனோஜ் திவாரி நிலைத்து நிற்க, மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தன. ஆனாலும் நங்கூரமிட்டு, அதேநேரத்தில் அடித்தும் ஆடிய மனோஜ் திவாரி, தனது முதல் முச்சதத்தை பதிவு செய்தார்.
414 பந்தில் 303 ரன்களை குவித்தார் மனோஜ் திவாரி. திவாரியின் முச்சதத்திற்காக காத்திருந்த பெங்கால் அணி, அவர் முச்சதம் அடித்ததும் முதல் இன்னிங்ஸை 629 ரன்களுக்குன் டிக்ளேர் செய்தது.