அக்டோபர் - நவம்பரில் ஐபிஎல்..? அடுத்த ஆண்டில் டி20 உலக கோப்பை..?
ஐபிஎல் 13வது சீசன் நடப்பது குறித்த முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்று உலகம் முழுதும் காட்டுத்தீயாய் பரவிவரும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகள் ஊரடங்கை அமல்படுத்திவிட்டு, கொரோனாவை தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
இந்தியாவில் கொரோனா சமூக தொற்றாக பரவுவதை தடுப்பதற்காக வரும் 14ம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் கிரிக்கெட் போட்டிகள் உட்பட அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் ரத்தாகிவிட்டன. ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கியிருக்க வேண்டிய உலகின் மிகப்பெரிய டி20 தொடரான ஐபிஎல் தொடர், ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன்பின்னரும் தொடங்குவது சந்தேகம் தான். நிலைமை சீரடைவதற்கே சில மாதங்கள் ஆகும் என்பதால், ஐபிஎல் நடப்பது சந்தேகம் தான்.
இந்நிலையில், இந்த சீசன் தாமதமாக தொடங்கப்பட நேர்ந்தால், குறைவான போட்டிகள் நடத்தப்படலாம். வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் நடத்தப்படலாம், டி20 உலல கோப்பை அக்டோபர் 18ம் தேதி அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்பாக ஐபிஎல்லை நடத்தலாம் என்பன போன்ற பல கருத்துகள் உலாவந்தன. ஆளாளுக்கு ஒரு ஐடியா கொடுப்பதுடன், ஐபிஎல் குறித்த பல தகவல்கள் உலா வருகின்றன.
ஆனால். ஐபிஎல் நடத்துவது குறித்து பிசிசிஐ, ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களுடன் ஏப்ரல் 15ம் தேதி ஆலோசனை நடத்தி அதன்பின்னர் தான் ஐபிஎல் குறித்த திடமான முடிவெடுக்கப்படும்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 18ம் தேதி தொடங்குவதாக அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள டி20 உலக கோப்பை அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாகவும், அதனால் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஐபிஎல் நடக்க வாய்ப்புள்ளதாகவும் ஐசிசி சோர்ஸ் மூலமாக தகவல் வெளியாகியிருக்கிறது.
டி20 உலக கோப்பை அக்டோபர் 18ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ளது. டி20 உலக கோப்பை தொடங்க இன்னும் 6 மாதங்கள் இருக்கும் நிலையில், கொரோனா பீதி அதற்குள்ளாக முடிவுக்கு வந்துவிடும். ஆஸ்திரேலியாவிலும் வெளிநாட்டினர் உள்ளே வர தடை விதிக்கப்பட்டு விமான போக்குவரத்தெல்லாம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் 6 மாதத்திற்குள்ளாக நிலைமை சீரடைந்துவிடும். எனினும் டி20 உலக கோப்பை அடுத்த ஆண்டு தள்ளிப்போவதற்கான வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி தள்ளிப்போனால், அதை பயன்படுத்தி பிசிசிஐ அக்டோபர் - நவம்பரில் ஐபிஎல்லை நடத்த முற்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.