2011ல் இதே தினத்தில் உலக கோப்பையை வென்ற இந்தியா.. ஃபைனலில் நடந்த சர்ச்சை சம்பவம் உங்களுக்கு தெரியுமா..?
2011 உலக கோப்பை ஃபைனலில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்ற தினம் இன்று. இன்றைய தினத்தில் அன்று நடந்த சர்ச்சையான சம்பவத்தை நினைவுகூர்வோம்.
1983ல் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி, உலக கோப்பையை வென்ற பின்னர், 28 ஆண்டுகள் கழித்து 2011ல் இந்திய அணி சொந்த மண்ணில் உலக கோப்பையை வென்று அசத்தியது.
2011ல் நடந்த உலக கோப்பையில் தோனி தலைமையிலான இந்திய அணி, இறுதி போட்டியில் இலங்கையை எதிர்கொண்டது. மும்பை வான்கடேவில் நடந்த அந்த போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி, 50 ஓவரில் 274 ரன்களை குவித்தது. கம்பீர்(97 ரன்கல்), தோனி(91 ரன்கள் நாட் அவுட்) ஆகிய இருவரின் பொறுப்பான பேட்டிங்கால் இந்திய அணி இலங்கையை வீழ்த்தி இரண்டாவது முறையாக உலக கோப்பையை வென்றது.
அந்த போட்டியில் டாஸ் போடும்போது சர்ச்சையான சம்பவம் நடந்தது. வான்கடேவில் கூடியிருந்த ரசிகர்களின் ஆரவாரத்தால், சங்கக்கரா டாஸ் கேட்டது, போட்டி நடுவர் ஜெஃப் க்ரூவ், வர்ணனையாளர் ரவி சாஸ்திரி, இந்திய கேப்டன் தோனி ஆகிய மூவருக்குமே கேட்கவில்லை. தோனி டாஸ் போட, சங்கக்கரா, heads கேட்டார். ஆனால் யாருக்குமே அது கேட்காத நிலையில், தோனி அவர்தான் டாஸ் வென்றதாக நினைத்து, பேட்டிங்கை தேர்வு செய்வதாக தெரிவித்தார்.
ரீப்ளேவில் சங்கக்கரா ஹெட்ஸ் தான் கேட்டார் என்பது உறுதியானது. ஹெட்ஸ்தான் விழுந்தது. ஆனாலும் இரண்டாவது முறையாக டாஸ் போடப்பட்டது. அப்போதும் இலங்கை தான் டாஸ் வென்றது. இதையடுத்து அந்த அணி முதலில் பேட்டிங் ஆடி 274 ரன்களை அடிக்க, 275 ரன்களை விரட்டி இந்திய அணி வெற்றி பெற்றது.