என்னோட “400” ரன் ரெக்கார்டை முறியடிக்க இவங்க 2 பேரால் தான் முடியும்.. ரோஹித்துடன் இன்னொரு வீரரையும் சேர்த்துக்கொண்ட லாரா
டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ஸ்கோரான 400 ரன்கள் என்ற சாதனையை யாரால் முறியடிக்க முடியும் என்று பிரயன் லாரா தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட்டில் ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மேன் பிரயன் லாரா. சச்சின் டெண்டுல்கருக்கு நிகரான ஒரு சிறந்த பேட்ஸ்மேன் பிரயன் லாரா.
சச்சின் டெண்டுல்கர் நீண்ட காலம் ஆடியதால், ஏராளமான பேட்டிங் சாதனைகளுக்கு அவர் சொந்தக்காரராக திகழ்கிறார். பிரயன் லாரா சச்சினைவிட 7 ஆண்டுகள் குறைவாகவே ஆடியுள்ளதோடு, அவருக்கு நிகரான போட்டிகளிலும் ஆடவில்லை. அப்படி ஆடியிருந்தால், சாதனை பட்டியலில் இருவருக்கும் கடும் போட்டி நிகழ்ந்திருக்கும்.
நிறைய சாதனைகளை தன்னகத்தே கொண்டிருக்காவிட்டாலும், முறையான ஒரு சாதனைக்கு சொந்தக்காரர் லாரா. டெஸ்ட் கிரிக்கெட்டில் பிரயன் லாரா அடித்த 400 ரன்கள் தான் ஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கோர்.
லாராவின் 400 ரன் சாதனையை பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டேவிட் வார்னர் முறியடித்திருப்பார். 335 ரன்கள் அடித்து வார்னர் அபாரமாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், இன்னிங்ஸ் டிக்ளேர் செய்யப்பட்டதால், வார்னரால் அடிக்க முடியாமல் போனது. இல்லையெனில் 400 ரன்களை அவர் அடித்திருப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.
ரோஹித் சர்மாவால் 400 ரன்களை அடித்து லாராவின் ரெக்கார்டை முறியடிக்க முடியும் என்று வார்னர் தெரிவித்திருந்தார். லாராவும், தனது ரெக்கார்டை ரோஹித்தால் முறியடிக்க முடியும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அதுகுறித்து பேசியுள்ள லாரா, ரோஹித் சர்மா மாதிரியான ஒரு வீரருக்கு, அந்த நாள் அவருடைய நாளாக அமைந்து, ஆடுகளமும் நன்றாக இருந்து, சரியான சூழல் அமைந்தால் கண்டிப்பாக 400 ரன்களுக்கு மேல் அடித்துவிடுவார். அதிரடியாக அடித்து ஆடி விரைவில் ஸ்கோர் செய்யக்கூடிய ஒரு பேட்ஸ்மேனால்தான் அந்த ரெக்கார்டை முறியடிக்க முடியும். அந்த வகையில் இளம் வீரர் ப்ரித்வி ஷாவால் அதை செய்ய முடியும். அவருக்கு வெறும் 19 வயதுதான். எனவே அவர் விரைவில் மீண்டும் கம்பேக் கொடுத்து அசத்துவார் என்று பிரயன் லாரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.