ரஜினிக்கு ஏன் விருது கொடுக்குறாங்க தெரியுமா..? ராஜேந்திர பாலாஜி சொன்ன தகவல்!
நடிகர்கள் யார் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம், அதை தவறு என்று சொல்ல முடியாது. ஆனால், சினிமாவில் நடிப்பதுபோல நிஜ வாழ்க்கையிலும் நடிக்கக் கூடாது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அரசியலில் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என நடிகர்கள் அரசியல் பேசுகிறார்கள். அதைச் சந்திக்க அதிமுக தயாராகவே உள்ளது.
நடிகர் ரஜினியின் நடிப்பு, அவரது யதார்த்தமான பேச்சுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்துள்ளது என்று தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ரஜினிக்கு மத்திய அரசு விருது வழங்குவதாக அறிவித்திருப்பதை அவர் வெகுவாகப் பாராட்டினார். “ நடிகர் ரஜினிக்கு மத்திய அரசு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க உள்ளது மிகவும் பொருத்தமானது. அவருடைய நடிப்பு, அவரது யதார்த்தமான பேச்சுக்கு இந்த விருது கிடைத்துள்ளது. மத்திய அரசு காலம் தாழ்த்தி இந்த விருதை வழங்கினாலும் பொருத்தமான நபருக்கு வழங்கியுள்ளது. இந்த விருதை வழங்குவதில் அரசியலுக்கு தொடர்பில்லை.
நடிகர்கள் யார் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம், அதை தவறு என்று சொல்ல முடியாது. ஆனால், சினிமாவில் நடிப்பதுபோல நிஜ வாழ்க்கையிலும் நடிக்கக் கூடாது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அரசியலில் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என நடிகர்கள் அரசியல் பேசுகிறார்கள். அதைச் சந்திக்க அதிமுக தயாராகவே உள்ளது.
அமமுக என்பது ஒரு கட்சியே கிடையாது. அது ஒரு குழு, அவ்வளவுதான். அங்கே யாருமே இருக்கமாட்டார்கள். டிடிவி. தினகரனின் கூடாரம் காலியாகிவிட்டது. அவர் ஒரு கலப்பட அரசியல்வாதி. சிறையில் உள்ள சசிகலாவை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். அதை தெரிந்துதான் அமமுகவிலிருந்து அனைவரும் விலகி வருகிறார்கள். உள்ளாட்சித் தேர்தல் மட்டுமல்ல, வர இருக்கிற சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் மட்டுமே போட்டி இருக்கும்” என்று ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.