திருவாரூர் தொகுதிக்கு இடைத் தேர்தல் எப்போது ? தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறது ?
திருவாரூர் தொகுதிக்கு இடைத் தேர்தல் எப்போது ? தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறது ?
தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திருவாரூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு கோபாலபுரம் வீட்டிலேயே இருந்த நிலையில் அவர் கடந்த 7-ந் தேதி மரணம் அடைந்தார்.
இந்நிலையில் கருணாநிதியின் மறைவு குறித்த தகவல் சட்டசபை செயலகத்துக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கருணாநிதி போட்டியிட்டு வென்ற திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாக சபாநாயகர் அறிவிப்பாணை வெளியிட்டார். அந்த அறிவிப்பாணை இந்திய தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
எனவே அந்தத் தேதியில் இருந்து அடுத்த ஆறு மாதங்களுக்குள் திருவாரூர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை இந்திய தேர்தல் கமிஷன் இனி மேற்கொள்ளும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதே போல் திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ., ஏ.கே.போஸ் கடந்த வாரம் மறைந்ததையடுத்து அந்த தொகுதியும் காலியானதாக சமீபத்தில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 2 தொகுதிகளுக்கும் அடுத்த 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.