கோயம்பேடு கட்சி அலுவலகத்தை எடுத்துக்கோங்க... கொரோனா பாதிப்பால் விஜயகாந்த் எடுத்த முடிவு!
"கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்தந்த வார்டுகளில் வசிக்கும் தேமுதிக நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் அத்தியாவசிய பொருட்களான உணவு, காய்கறி, உடை, மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்க வேண்டும். துப்புரவு பணியாளர்களுக்கும் தேவையான உபகரணங்களை வழங்க வேண்டும். ஊரடங்கு உத்தரவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களின் குடும்பத்தினருக்கும் உதவிகளைச் செய்ய வேண்டும்” என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் மக்களுக்கு சிகிச்சை அளிக்க கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளும்படி அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்பட்சத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அதிக படுக்கைகள் தேவைப்படும் என்பதால், காலியாக உள்ள கட்டிடங்களை தந்து உதவுமாறு அரசு அறிவித்தது. இதனையடுத்து பல கட்சித் தலைவர்களுக் தங்கள் கட்சி அலுவலங்கள் மற்றும் தங்களுக்கு சொந்தமான கட்டிடங்களை சிகிச்சைக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவித்துவருகிறார்கள். அந்த வகையில் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தைப் பயன்படுத்திக்கொள்ளும்படி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு தேமுதிக ஆதரவு தெரிவித்துவருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியையும், சென்னையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் தேமுதிக தலைமை அலுவலகத்தையும் அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அதுபோன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்தந்த வார்டுகளில் வசிக்கும் தேமுதிக நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் அத்தியாவசிய பொருட்களான உணவு, காய்கறி, உடை, மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்க வேண்டும். துப்புரவு பணியாளர்களுக்கும் தேவையான உபகரணங்களை வழங்க வேண்டும். ஊரடங்கு உத்தரவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களின் குடும்பத்தினருக்கும் உதவிகளைச் செய்ய வேண்டும்” என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.