வைரமுத்துவுக்கு விருது பெரிதல்ல... உங்க பேரும், புகழும்தான் கெட்டுப்போச்சு... சீறும் சீமான்..!
விருதுகளால் வைரமுத்துவுக்கு புதிதாக எவ்விதப்பெருமையும் சேரப்போவதில்லை. அவரின் கரங்களின் தவழ்வதால்தான் அவ்விருதுக்குப் பெருமை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு இலக்கியத்துக்கான பட்டத்தை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் வழங்கவிருந்தது. இந்த விழா மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற இருந்தது. இந்நிலையில் பாடகி சின்மயி, மீடு புகார் கொடுக்கப்பட்டது குறித்து சர்ச்சை பதிவை வெளியிட்டு இருந்தார். அதனையடுத்து அந்த விழாவில் வைரமுத்து பெயர் நீக்கப்பட்டது.
அடுத்து ராஜ்நாத் சிங்கும் அந்த விழாவிற்கு வருவதை தவிர்த்து விட்டார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நாம் தமிழர்கட்சியை சேந்த சீமான், ‘’கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்குக் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்வை மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் புறக்கணித்தது அரசியல் அநாகரீகமான செயல். விருதுகளால் ஐயாவுக்குப் புதிதாக எவ்விதப்பெருமையும் சேரப்போவதில்லை. ஐயாவின் கரங்களின் தவழ்வதால்தான் அவ்விருதுக்குப் பெருமை.
இவ்விழாவைப் புறக்கணித்துத் தனக்குக் கிடைக்க இருந்த பேரையும், பெருமையையும் இழந்துவிட்டார் ராஜ்நாத் சிங். தொடர்ந்து தமிழுக்கும், தமிழ் பண்பாட்டுக்கும் எதிராகச் செயல்பட்டு வருகிற மத்திய பாஜக அரசின் தொடர் நடவடிக்கைகள் யாவும் வன்மையான கண்டனத்திற்குரியது’’எனத் தெரிவித்துள்ளார்.