30 ஆண்டு நட்பு நம்பவில்லை, எதிரி என்னை நம்புகிறார்: பாஜவை விளாசிய உத்தவ் தாக்கரே...
30 ஆண்டுகளாக நட்போடு இருந்தவர்கள் (பா.ஜ.க.) நம்மை நம்பவில்லை. ஆனால் எதிரியாக நினைத்தவர்கள் (காங்கிரஸ்) நமக்கு நம்பிக்கை அளித்துள்ளனர் என பா.ஜ.க.வை உத்தவ் தாக்கரே கடுமையாக தாக்கினார்.
சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் அடங்கிய மகா விகாஸ் அகாதி கூட்டணியின் தலைவராக சிவ சேனாவின் உத்தவ் தாக்கரே நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். நாளை மாலை மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்க உள்ளார்.
கூட்டணி தலைவராக உத்தவ் தாக்கரே தேர்வான பிறகு, பா.ஜ.க.வை அவர் கடுமையாக தாக்கி பேசினார். உத்தவ் தாக்கரே கூறியதாவது: தேவேந்திர பட்னாவிசின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க நான் தயாராக உள்ளேன்.
நான் எதற்கும் பயப்படவில்லை. பொய்கள் இந்துத்துவத்தின் ஒரு பகுதியாக இல்லை. தேவைப்படும்போது எங்களை கட்டிப்பிடித்தீர்கள். அப்போது நீங்கள் எங்களை விட்டு வெளியேறவில்லை. எங்களை ஒதுக்கி வைக்க முயற்சி செய்தீர்கள்.
யாருடன் நாம் 30 ஆண்டுகளாக நட்பு கொண்டு இருந்தோமோ அவர்கள் நம்மை நம்பவில்லை. ஆனால் நாம் யாரை எதிர்கட்சியாக தாக்கினோமோ அவர்கள் தங்களது நம்பிக்கையை அளித்தனர். நான் பழிவாங்க மாட்டேன். ஆனால் என் பாதையில் குறுக்கீடாதவரை என அவர்களுக்கு சொல்லி கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்