எங்களுக்கும்தான் இலை முக்கியம் - இபிஎஸ், ஒபிஎஸ்சை தொடர்ந்து டிடிவியும்...!
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் டிடிவி தினகரன் அணி தரப்பில் எழுத்துப் பூர்வமான வாதம் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தினகரன் தரப்பில் வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் ஆவணங்களை தாக்கல் செய்தார்.
இரட்டை இலை சின்னத்தை பெறுவது தொடர்பாக ஓ.பி.எஸ்., இ.பி.எஸ், அணியினருக்கும், டிடிவி தினகரன் அணியிருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்திய தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி முன்னிலையில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் கடந்த 6 ஆம் தேதியே டிடிவி தரப்பு வாதம் முடிவுற்றது.
இதைதொடர்ந்து நடைபெற்ற 7 ஆம் கட்ட விசாரணையில் எடப்பாடி தரப்பு மற்றும் ஒபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.
இதையடுத்து மீண்டும் வாதிட டிடிவி தரப்பு வழக்கறிஞர் அவகாசம் கோரினார். ஆனால் டிடிவி தரப்பின் கோரிக்கையை நிராகரித்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது. மேலும் வாதங்களை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
அதன்படி இன்று இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணி தரப்பில் எழுத்துப் பூர்வமான வாதம் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 100க்கும் மேற்பட்ட பக்கங்களை கொண்ட எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவர்களை தொடர்ந்து இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் டிடிவி தினகரன் அணி தரப்பில் எழுத்துப் பூர்வமான வாதம் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது.