ஆர்.கே.நகருக்கு குட்பை..! ஒரத்தநாடு இல்லனா? தேனி..!தொகுதி மாறும் டிடிவி!
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தனக்கான தொகுதியை இறுதி செய்யும் பணியை தற்போதே தொடங்கியுள்ளார் டிடிவி தினகரன்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு திடீரென அரசியல் களம் புகுந்த டிடிவி தினகரன் சென்னை ஆர்கே நகரில் சுயேட்சையாக போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார். இதன் மூலம் அவரது கிராஃப் அரசியல் களத்தில் படுவேகத்தில் ஏறியது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் படு தோல்வி அடைந்தது. ஒரு தொகுதியில் கூட டெபாசிட் பெற முடியவில்லை. இடைத்தேர்தல்களிலும் டிடிவி கட்சி வேட்பாளர்கள் மண்ணை கவ்வினர். இதனால் அதிர்ச்சி அடைந்த டிடிவி தினகரன் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்களை புறக்கணித்தார். வேலூர் நாடாளுமன்ற தேர்தலிலும் தலைகாட்டவில்லை. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் களம் இறங்கிய நிலையில் சொல்லிக் கொள்ளும்படி வெற்றி பெறவில்லை என்றாலும் ஓரளவு கணிசமான வாக்குகளை அவரது கட்சி வேட்பாளர்கள் பெற்றனர். இதனால் மீண்டும் தனது அரசியல் கனவை புதுப்பித்துக் கொண்டு களம் ஆடி வருகிறார்.
கடந்த ஒரு வார காலமாக மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமனத்தில் டிடிவி தீவிரம் காட்டி வருகிறார். பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் அதிமுக மற்றும் திமுகவிற்கு சென்றுவிட்ட நிலையில் காலியாக உள்ள பதவிகளுக்கு இரவு பகலாக கண் விழித்து மிகவும் கவனத்துடன் ஆட்களை நியமித்து வருகிறார். இதே போல் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வையும் அமமுக இப்போதே தொடங்கிவிட்டதாக சொல்கிறார்கள். கடந்த முறையை போல் கோட்டைவிட்டுவிடக்கூடாது என்பதற்காக தற்போதே பணிகளை ஆரம்பிக்க டிடிவி உத்தரவிட்டுள்ளாராம்.
அதே போல் ஆர்.கே.நகர் எம்எல்ஏவாக உள்ள டிடிவி தினகரன் தொகுதிப்பக்கம் சென்றே பல மாதங்கள் ஆகிறது. இதற்கு காரணம் மீண்டும் டிடிவி ஆர்.கே.நகரில் களம் இறங்க தயாராக இல்லையாம். தனது சொந்த மாவட்டமான தஞ்சையில் ஏதேனும் ஒரு தொகுதி அல்லது தான் அரசியல் களம் புகுந்த தேனி மாவட்டத்தில் ஒரு தொகுதியில் களம் இறங்க அவர் திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள். அந்த வகையில் தஞ்சை ஒரத்தநாடு அல்லதுதேனி என இரண்டு தொகுதிகளில் ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடும் முடிவில் டிடிவி உள்ளதாக சொல்கிறார்கள். கடந்த இரண்டு நாட்களாக அந்த தொகுதி நிர்வாகிகளை அழைத்து உறுப்பினர்கள் எண்ணிக்கை விவரங்களை டிடிவி கேட்டு அனுப்பியதாக கூறப்படுகிறது.