யார் தவறு செய்தாலும் பாத்ரூமில் வழுக்கி விழுவார்கள்... அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி விளக்கம்!
சாதாரணமாக 10 பேர் கூடி பேசுகிறார்கள் என்றால், தவறு இல்லை. ஆனால், பெரிய அளவில் கூட்டம் என்றால் அனுமதி வாங்க வேண்டும். திமுக தலைவர் கலந்துகொண்ட கூட்டத்துக்கு அனுமதி வாங்கியிருக்க வேண்டுமா, வேண்டாமா?
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் யார் தவறு செய்தாலும் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை உடையும் என்று தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சர்களில் அதிரடியாக கருத்து தெரிவிப்பவர்களில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எப்போதுமே முதலிடம்தான். தனியார் தொலைக்காட்சி ஒன்றில், அவருடைய பேட்டி இடம் பெற்றது. அப்போது வேலூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற மண்டபத்துக்கு சீல் வைக்கப்பட்டது தொடர்பாகவும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசும்போது, “சாதாரணமாக 10 பேர் கூடி பேசுகிறார்கள் என்றால், தவறு இல்லை. ஆனால், பெரிய அளவில் கூட்டம் என்றால் அனுமதி வாங்க வேண்டும். திமுக தலைவர் கலந்துகொண்ட கூட்டத்துக்கு அனுமதி வாங்கியிருக்க வேண்டுமா, வேண்டாமா? இந்த அடிப்படை அறிவு கூட திமுகவுக்கு இல்லையா?
திமுக என்ன செய்தாலும் பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமா? அவர்கள் என்ன சொன்னாலும் அரசு கேட்க வேண்டுமா? யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும். அதிமுகவினரே தவறு செய்தாலும் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை உடையும். திமுகவினர் தவறு செய்தாலும் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை உடையும். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் யாரும் தப்பிக்க முடியாது” என ராஜேந்திர பாலாஜி பேசினார்.
அண்மைக்காலமாக குற்றச் செயல்களில் ஈடுபட்டு போலீஸிடம் சிக்குவோர், பாத்ரூமில் வழக்கி விழுந்து கை, கால் உடைந்த நிலையில் கட்டுகளோடு இருக்கும் புகைப்படங்கள் வெளி வரத் தொடங்கி உள்ளன. இதற்கு பொதுமக்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் சமமாகவே இருந்துவருகிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் யார் தவறு செய்தாலும் பாத்ரூமில் வழக்கிவிழுவார்கள் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடியாகத்தெரிவித்துள்ளார்.