ஆய்வு செய்தால் ஆளுநர் ஆட்சியா? விளக்கம் கேட்கும் தமிழிசை!
ஆளுநர் ஆய்வு செய்வதால், ஆளுநர் ஆட்சி என்று சொல்லக்கூடாது என்றும், பாஜக ஆளும் மாநிலங்களில் ஆட்சி சரியாக நடப்பதால் ஆளுநர் ஆய்வு செய்வதில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
தமிழிசை சௌந்தரராஜன், புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்:
ஆளுநர் மீது எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக தெரிவித்தார். பாஜக ஆளும் மாநிலங்களில் எந்த ஆளுநரும் ஆய்வுக்கு செல்வதில்லை. அங்கெல்லாம் ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது.
தமிழகத்தில் ஆட்சி சரியாக இல்லாததையே ஆளுநரின் தொடர் ஆய்வுகள் வெளிப்படுத்துகிறது. அதனால் இங்கு ஆளுநர் ஆட்சி நடைபெறுவதாக சிலர் கூறுவது வேடிக்கையாக உள்ளது.
மாநிலத்தின் முன்னேற்றத்தில்தான் அனைவரும் அக்கறை கொள்ள வேண்டுமே தவிர இவ்வாறான தவறான குற்றச்சாட்டுகளை முன்வைக்க கூடாது.
விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கிய கடன்களையும், நிதிகளையும் ஆளும் கட்சி முறையாக பயன்படுத்தவில்லை. இவற்றையெல்லாம் அறிந்துக்கொள்ளவே ஆளுநர் தொடர் ஆய்வுகளை மேற்கொள்கிறார்.
இவ்வாறு கூறினார்.