சசிகலா குடும்பத்தினர் நடத்தி வந்த 9 போலி நிறுவனங்கள்… சொத்துக்களை முடக்கி வருமான வரித்துறை அதிரடி !! எவ்வளவு தெரியுமா ?
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா குடும்பத்தினர் நடத்தி வரும் 9 போலி நிறுவனங்களின் 1, 600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித்துறை முடக்கி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் கடற்த 1991 – 96 அதிமுக ஆட்சியின்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாக தொடரப்பட்ட வழக்கில் அனைவரும் குற்றவாளி என கர்நாடக தனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் மனு மீது தீர்ப்பளித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா உட்பட நால்வரையும் விடுவித்தார்.
ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் கர்நாட தனிநீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்தது. ஆனால் அந்த தீர்ப்பு வருவதற்கு முன்பு ஜெயலலிதா மரணமடைந்தார். இதையடுத்து சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களுரு சிறையில் அமைடக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட 187 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 2017-ம் ஆண்டு சோதனை நடத்தினர். சசிகலா குடும்பத்தினர், 60-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி 1,500 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் பல நூறு கோடி ரூபாய்க்கு சொத்துகள் வாங்கியது தொடர்பான ஆவணங்களும் சோதனையில் சிக்கின. இதையடுத்து சசிகலாவின் உறவினர்கள், பினாமிகள் உட்பட பலரிடம், வருமான வரி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் சசிகலா குடும்பத்தினர் பினாமி பெயரில் நடத்தி வந்த 9 நிறுவனங்களுக்கு சொந்தமான, 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக வருமானவரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.