அவுங்களுக்கு எதிராக பாஜக அரசின் ஆண்மையை காட்டச் சொல்லுங்க.. ஆண்மை விவகாரத்தில் குதித்த திருமுருகன் காந்தி!
அவ்வளவு தைரியம் பாஜகவிற்கு இருந்தால், சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து அறிக்கை கொடுத்து ஒன்றிய அரசின் 'ஆண்மை'யை காட்டச்சொல்லுங்கள்.
பாஜகவுக்கு தைரியம் இருந்தால், சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து அறிக்கை கொடுத்து ஒன்றிய அரசின் 'ஆண்மை'யை காட்டச்சொல்லுங்கள் என்று மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாணவி மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தமிழக பாஜக சார்பில் சென்னையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பாஜக துணை தலைவரும் சட்டப்பேரவை பாஜக தலைவருமான நயினார் நாகேந்திரன் பேசியது சர்ச்சையானது. அவர் பேசும்போது, “தமிழகத்தில் அதிமுக எதிர்க்கட்சி போல செயல்படவில்லை. பாஜக எதிர்க்கட்சியாக இல்லை என்றாலும்கூட துணிந்து கேள்வி எழுப்புகிறது. சட்டப்பேரவையில் ஆண்மையோடு பேச அதிமுகவில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை . மக்கள் பிரச்சினையை சட்டப்பேரவையில் பேசுவதில்லை. பாஜகவின் அண்ணாமலை மட்டுமே துணிச்சலோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார், எதிர்க்கட்சியாக இல்லை என்றாலும் ஊடகங்களுக்கு தைரியமாக பேட்டி கொடுப்பவர் அண்ணாமலை மட்டுமே” என நயினார் நாகேந்திரன் பேசியிருந்தார்.
நயினார் நாகேந்திரனின் பேச்சு சர்ச்சையான நிலையில், அதிமுகவினர் கொந்தளித்தனர். ஆண்மை இருந்தால், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தனியாகப் போட்டியிட்டு ஆண்மையை நிரூபியுங்கள் என்று சமூக ஊடகங்களில் அதிமுகவினர் நயினார் நாகேந்திரனுக்கு பதிலடி கொடுத்தனர். அதிமுக நிர்வாகிகளும் நாகேந்திரனுக்கு பதிலடி கொடுத்திருந்தனர். இதனையத்து தன்னுடைய பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்தனர். என்றாலும் அதிமுகவினர் நயினார் நாகேந்திரனை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுகவுக்கு ஆதரவாக மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “அவ்வளவு தைரியம் பாஜகவிற்கு இருந்தால், சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து அறிக்கை கொடுத்து ஒன்றிய அரசின் 'ஆண்மை'யை காட்டச்சொல்லுங்கள். மோடியை ஊடகங்களை சந்திக்க சொல்லுங்கள். ஊராட்சி தேர்தலில் கூட தேராத குப்பைகளை தூக்கிச் சுமந்த அதிமுகவினருக்கு இனிமேலாவது சுயமரியாதை உணர்ச்சி வருமா?” என்று திருமுருகன் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.