பொறுப்பற்ற அமைச்சரும் மீடியாக்களும்!! – பிளஸ் டூ தேர்வில் தொந்தரவு செய்த கொடுமை!!!...
புதிதாக பதவியேற்றுள்ள பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையனும், 20 க்கும் மேற்பட்ட மீடியா கேமரா மேன்களும் பிளஸ் டூ தேர்வறைக்குள் சென்றதால் அங்கு தேர்வு எழுதிய மாணவிகளுக்கு பெரும் தொந்தரவு ஏற்பட்டது.
மாணவ மாணவிகளின் வாழ்கையை நிர்ணயிக்கும் முக்கிய தேர்வான பிளஸ் டூ தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. வருடக்கணக்கில் படித்து ஒவ்வொரு நிமிடத்தையும் வீண் அடிக்காமல் இறுதி தேர்வுக்கு தயாராகி இருந்தனர் மாணவ மாணவியர்.
நேரத்தை வீணாக்காமல் கேள்வித்தாளை படிப்பது எப்படி, தெரிந்த கேள்விகளுக்கான பதிலை உடனடியாக எழுதிவிட வேண்டும் என்பன போன்ற பயிற்சிகளும் கொடுக்கப்படுகிறது.
அந்த அளவிற்கு ஒவ்வொரு நிமிடத்தையும் வீணடிக்காமல் தற்போதைய மாணவர்கள் தெளிவாக திட்டமிட்டு செயல்படுகின்றனர்.
குறிப்பாக தேர்வு எழுதும் மாணவர்களை பொறுத்தவரை அவர்களுக்கு எந்த கவனச் சிதறலும் இருக்க கூடாது.
வருட கணக்கில் படித்து, கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க ஏதுவாக தங்களது மனதை ஒருமுகப்படுத்திய நிலையிலேயே இருக்க வேண்டும். கவன சிதறல் ஏற்பட்டால் நன்கு படித்து தெரிந்த விடைகள் கூட மறந்து போக வாய்ப்புண்டு.
இவ்வளவு சென்சிடிவ் அம்சங்களை கொண்ட பிளஸ் டூ தேர்வின் போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் அத்துறையின் செயலாளர் சபீதா ஐ.ஏ.எஸ்சும் ஆய்வு செய்கிறோம் என்ற பெயரில் நுழைந்தனர்.
பி.ஆர்.ஒக்கள் தகவலின் படி செய்தி சேகரிக்க மீடியா கேமரா மேன்கள் 20 க்கும் மேற்பட்டோர் உடன் சென்றனர்.
அவர்கள் சென்றது மேல்நிலை பள்ளிக்கூடம். ஒரு வகுப்பில் சுமார் மூன்றிலிருந்து ஐந்து நிமிடம் வரை அமைச்சர் ஆய்வு செய்வதை கேமரா மேன்கள் படம் பிடித்தனர்.
அதிலும் சில கேமராமேன்கள் மாணவிகள் தேர்வெழுதும் பெஞ்சின் மீதே ஏறி நின்று படம் பிடித்தனர்.
ஒரு ஐந்து நிமிடம் என்பது சிறிய கேள்விகள் 5 க்கு பதில் அளிக்ககூடிய நேரமாகும்.
சுமார் 20 க்கும் மேற்பட்டோர் தேர்வறைக்குள் ஒரே நேரத்தில் புகுந்ததால் அங்கு தேர்வெழுதிய மாணவிகளுக்கு கவன சிதறல் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருக்கும் என கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றனர் பெற்றோர்கள்.
இனிமேலாவது தேர்வு போன்ற முக்கியமான நேரங்களில் கவன சிதறல் மற்றும் நேரத்தை வீணடிக்கும் விஷயங்களை அதிகாரத்தில் உள்ளவர்கள் தவிர்ப்பார்களா????