எலக்சன் செலவை நான் பார்த்துக்கிறேன்... கோமாளியில் கலாய்த்த கல்வித் தந்தைக்கு ரஜினி மீது வந்த திடீர் ஆசை..!
‘எலக்சன் வந்தால் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அதையெல்லாம் செய்வேன்’என்றும் வாக்குறுதி அளித்திருக்கிறாராம்.
தமிழ்சினிமாவில் தவிர்க்க முடியாத தயாரிப்பாளர் ஆகி வருகிறார் ஐசரி கணேஷ். வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனரான ஐசரி கணேஷ் ‘வேல்ஸ் பிலிம் இண்டர் நேஷனல்’என்ற பட நிறுவனத்தை தொடங்கி ‘எல்.கே.ஜி.’‘கோமாளி’‘பப்பி’ஆகிய 3 படங்களை தயாரித்தார். இந்த படங்களின் வெற்றி விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கொண்டாடினார்கள்.
இப்படி ஒருபுறம் இருக்க சினிமாவில் இருந்து அரசியலுக்கு செல்ல இருக்கும் ரஜினியை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்கிற ஆசை ஐசரி கணேசனுக்கு இருக்குமல்லவா? கரெக்டான சந்தர்ப்பத்தில் மூக்கை நுழைத்துக் கொண்டார். கொஞ்ச நாட்களாகவே ரஜினியும், கமலும் அரசியலில் இணைவது தொடர்பான விஷயங்கள் அலசப்படுகின்றன. இதற்கு பிள்ளையார் சுழி போட்டவரே ஐசரி கணேஷ்தானாம்.
இருவரிடமும் தனித்தனியாக பேசிவரும் அவர், ‘எலக்சன் வந்தால் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அதையெல்லாம் செய்வேன்’என்றும் வாக்குறுதி அளித்திருக்கிறாராம். பொதுநலன் கருதி எடுத்த முடிவா? சுயநலம் கருதி எடுத்த முடிவா..? தெரியாது. ஆனால் இந்த விஷயத்தை நடத்திக் காட்டியதுடன் நிற்காமல் ரஜினியின் கால்ஷீட்டையும் கைப்பற்றக் கூடும் என்கிறார்கள்.
ஆமாம்... அந்த கோமாளி படத்தில் ரஜினியின் அரசியல் வருகை பற்றி பகடி செய்ததே நீங்கள் தானே ஐசரி கணேஷ்... ஓஹோ... அதையெல்லாம் மறந்திருப்பாரோ இந்த ரஜினி?