உள்ளாட்சித் தேர்தல்... ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு எச்சரிக்கை..!
உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தைச் சார்ந்தவர்கள் யாரும் போட்டியிடக்கூடாது என அந்த மன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் ரஜினி மற்றும் மக்கள் மன்றத்தின் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. யாருக்கும் ஆதரவாக வாக்குசேகரிக்க கூடாது என்று அறிவுறுத்தியுள்ள ரஜினி மக்கள் மன்றம், மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக திருச்சி ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்று ரஜினிகாந்த் அறிவித்துள்ளதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தின் மாநகர, ஒன்றிய, நகர பகுதிகளில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தைச் சார்ந்த யாரும் போட்டியிடவோ, யாருக்கும் ஆதரவாக வாக்கு சேகரிக்கவோ கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. மீறினால் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என்று ரஜினி மக்கள் மன்றம் எச்சரித்துள்ளது.