உலகின் பாலியல் பலாத்கார தலைநகரம் எது தெரியுமா ? ராகுல் காந்தி அதிரடி பேட்டி !!
உலகின் பாலியல் பலாத் கார தலைநகராக இந்தியா ஆகிவிட்டது. ஆனால், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மோடி அமைதி காக்கிறார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் 5 கட்டங்களாக நடந்து வருகிறது. இரண்டு கட்டங்கள் முடிவடைந்த நிலையில், மூன்றாவது கட்ட தேர்தலை சந்திக்கும் தொகுதிகளில் பிரசாரம் நடந்து வருகிறது. அவற்றில் ஒன்றான, பர்காகான் தொகுதியில் நேற்று காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. அதில், ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, தற்போது பெண்கள், வீட்டை விட்டு வெளியே வரவே பயப்படுகிறார்கள். அவர்கள் எரிக்கப்படுகிறார்கள் அல்லது சுடப்படுகிறார்கள். ஆனால், இதுபற்றி பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசாமல் மவுனமாக இருக்கிறார்.
உத்தரபிரதேசத்தில் அவரது கட்சி எம்.எல்.ஏ. ஒரு இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். பிறகு அந்த பெண் மீது விபத்து ஏற்படுத்தப்பட்டது.
ஆனால், பிரதமர் மோடி அமைதி காக்கிறார். பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்போம் என்று வாக்குறுதி அளித்தும் அவர் அமைதி காப்பது ஏன்? இத்தகைய சம்பவங்களால், உலகின் பாலியல் பலாத்கார தலைநகராக இந்தியா ஆகிவிட்டது.
பிரதமர் மோடி, ஜார்க்கண்டுக்கு வரும் போதெல்லாம், விவசாயிகளை பாதுகாப்போம் என்று கூறுகிறார். ஆனால், வலுக்கட்டாயமாக நிலம் பறிக்கப்படுவதை எதிர்த்ததற்காக எத்தனை விவசாயிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்ற எண்ணிக்கையை அவரிடம் சொல்லுங்கள்.
விவசாயிகள் கொல்லப்படுகிறார்கள், அவர்களின் நிலம் பறிக்கப்படுகிறது. ஆனால், விவசாயிகளை பாதுகாப்போம் என்று பிரதமர் மேடையில் இருந்து பேசுகிறார்.
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் பஞ்சாப், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.