ஒப்படைக்கப்பட்டது ரஃபேல் போர் விமானம்: பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து முதல் விமானத்தை பெற்றது இந்தியா
பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து முதலாவது ரஃபேல் போர் விமானத்தை இந்திய விமானப்படையின் ஏர் மார்ஷல் இன்று பெற்றுக்கொண்டார். அந்த விமானத்தில் ஏறக்குறைய ஒருமணி நேரம் பறந்து சோதித்தார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன
பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து சுமார் ரூ.62 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக கடந்த 2016 செப்டம்பர் மாதம் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தின்படி முதல் போர்விமானம் இன்று ஒப்படைப்படைக்கப்பட்டது.
பிரான்ஸின் போர்டியக்ஸ் நகரில் ரஃபேல் விமானம் தயாரிக்கப்படும் தொழிற்சாலையிலேயே இன்று நடந்த நிகழ்ச்சியில் பிரான்ஸ் நாட்டின் ராணுவ உயர் அதிகாரிகள், ரஃபேல் விமானத்தை தயாரிக்கும் டசலாட் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் இந்தியாவிடம் முதல் ரஃபேல் விமானத்தை ஒப்படைத்தனர். இந்த ரஃபேல் விமானத்தை ஏர் மார்ஷல் சவுத்ரி பெற்றுக்கொண்டார். விமானத்தின் இறக்கை எண் ஆர்பி-01 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விமானத்தில் ஒரு மணிநேரம் பயணித்தார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன
விமானத்தை பெறும்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, பிரான்ஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காகவும் இந்திய விமானப்படையின் ஒருகுழு முன்கூட்டிய பிரான்ஸ் வந்து சேர்ந்தனர்
ரஃபேல் விமானத்தை இயக்குவதற்காக இந்திய விமானப் படையைச் சேர்ந்த 24 விமானிகள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, பிரான்ஸ் விமானப் படையில் உள்ள ரஃபேல் விமானம் மூலம் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்தியாவுக்கு வழங்கப்படும் ரஃபேல் விமானத்தை இயக்குவதற்கு அடுத்த ஆண்டு மே மாதம் வரையில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
முதல்பிரிவு ரஃபேல் விமானங்கள் அம்பாலா விமானப்படைத் தளத்திலும், 2-வது பிரிவு விமானங்கள் மேற்குவங்கத்தில் உள்ள ஹஸிமரா விமானப்படைத் தளத்திலும் நிறுத்தப்பட உள்ளது.
இந்தியாவுக்கான முதல் ரஃபேல் போர் விமானத்தை வரும் அக்டோபர் 8-ம் தேதி ராஜ்நாத் சிங் பெறுகிறார். இதற்காக அவர் பிரான்ஸ் செல்கிறார். அவருடன் பாதுகாப்புத் துறை செயலர் அஜய் குமார் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் சிலரும் செல்கின்றனர்.
அக்டோபர் 8-ம் தேதி இந்திய விமானப் படை தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதனாலேயே அன்றைய தினம் விமான கொள்முதலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதிகாரபூர்வமாக அக்டோபர் 8-ல் ரஃபேல் இந்திய விமானப் படையில் இணைந்தாலும்கூட 2020 மே மாதத்தில்தான் அவை இந்தியாவுக்கு வந்து சேரும்.
இந்தியாவிடம் அளிக்கப்பட உள்ள ரஃபேல் போர் விமானம் பிரான்ஸ் ராணுவத்திடம் கூட இல்லாத அளவுக்கு நவீனமானதாகும். இஸ்ரேல் நாட்டின் ஹெல்மெட் டிஸ்ப்ளே, ரேடார் எச்சரிக்கை கருவிகள், குறைந்தஅலைவரிசையை முடக்கும் ஜாமர்கள், 10 மணிநேரம்வரை விமானிகளின் உரையாடலை பதிவு செய்யும்வசதி, கண்காணிப்பு, உள்ளிட்ட பல்வேறு நவீன அம்சங்கள் உள்ளன.