ஊரடங்கை போட்டுவிட்டு ராமர் கோயில் கட்டும் பணி தொடக்கம்... உண்மையானது காங்கிரஸ்- திமுக வதந்தி..!
கடந்த சில நாட்களுக்கு முன் காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள் ராம ஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்ட பூமி பூஜை நடத்துவதாக வதந்தி கிளப்பி விட்டதாக கூறப்பட்டது.
ஒருபுறம் கொரோனா வைரஸ் தாக்கம் வாட்டியெடுக்க மற்றொருபுறம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் முதல் கட்ட பணிகள் தொடங்கியது. அதற்கான பூஜை இன்று நடைபெற்றது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் முதல் கட்ட பணிகள் தொடங்கியது. ராமர் சிலை வைக்கப்படும் புதிய இடத்தைதேர்வு செய்து அங்கு பூஜை செய்யபட்டது. கட்டுமானப் பணி தொடங்குவதற்கு முன்பு சிலையை கூடாரத்திலிருந்து புதிய இடத்திற்கு மாற்றும் பணி தொடங்கும். இதுகுறித்து, விஸ்வ இந்து பரிஷத் துணைத் தலைவரும், ராமர் கோயில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளருமான சம்பத் ராய், ‘’ராமர் சிலை புதிய இடத்தில் வைப்பதற்கான இடத்தின் பிரதிஷ்டை இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அறக்கட்டளை உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளூர் எம்.எல்.ஏ. இதில் கலந்து கொண்டனர். சிலை மார்ச் 25 ஆம் தேதி புதிய இடத்திற்கு மாற்றப்படும். முறையான அடிக்கல் நாட்டப்பட்ட பின்னர், கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்’’என கூறினார்.
பிரதமர் வேண்டுகோளை ஏற்று கொரோனா பரவாமல் தடுக்க மக்கள் தாமாக முன்வந்து ஊரடங்கு உத்தரவை கடைபிடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதுவரை இந்தியாவில் 82 மாவட்டங்கள் தனித்து வைக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள் ராம ஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்ட பூமி பூஜை நடத்துவதாக வதந்தி கிளப்பி விட்டதாக கூறப்பட்டது. இந்த சம்பவத்தை கேட்ட எதிர்தரப்பினர், நமக்கு ஊரடங்கு உத்தரவை போட்டு விட்டு, பாபர் மசூதி நிலத்தில் ராமர் கோயில் கட்ட பூஜை ரகசியமாக நடக்கிறது’’என விமர்சித்து வருகின்றனர்.