கேரள எல்லையை மூடக்கூடாது..! பிரதமருக்கு அவசர அவசரமாக கடிதம் எழுதிய பினராயி விஜயன்..!
கொவைட்-19க்கு எதிரான யுத்தத்தில் அரசு போராடும் இந்த தருணத்தில் கேரளத்துக்கு அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி வருவதை உறுதி செய்ய இந்த விவகாரத்தில் மத்திய அரசு அவசரமாக தலையிட்டு சாலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உலகளவில் கோர தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரையில் 923 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 20 பேர் பலியாகி இருக்கின்றனர். இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா முழுவதிலும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் மாநில எல்லைகள் மூடப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல ஏதுவாக கர்நாடக-கேரளா எல்லையை மூடக்கூடாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
இதுதொடா்பாக பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கேரள மாநிலம் தலச்சேரியில் இருந்து விராஜபேட்டை வழியாக கா்நாடக மாநிலம், குடகு வரையிலான தலச்சேரி-குடகு மாநில நெடுஞ்சாலை- 30 வழியாக தினமும் சரக்கு லாரிகள் மூலமாக காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கேரளம் கொண்டு செல்லப்பட்டு வந்தது. இந்த பாதை மூடப்பட்டுள்ளதால், சரக்கு லாரிகள் சுற்றுவழிப்பாதையில் நீண்ட தூரம் பயணித்துதான் கேரளம் வருகின்றன. இந்த சாலை கேரளத்துக்கு அத்தியாவசிய பொருள்களைக் கொண்டு வரும் முக்கியமான உயிா்நாடி சாலையாகும்.
தற்போதைய தேசிய ஊரடங்கு உத்தரவால் இந்தச் சாலை மூடப்பட்டதால் மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. கொவைட்-19க்கு எதிரான யுத்தத்தில் அரசு போராடும் இந்த தருணத்தில் கேரளத்துக்கு அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி வருவதை உறுதி செய்ய இந்த விவகாரத்தில் மத்திய அரசு அவசரமாக தலையிட்டு சாலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பினராயி விஜயன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.