பெட்ரோல் விலையை குறைப்பது மத்திய அரசின் கையில் இல்லைங்க !! தெனாவெட்டா பேசிய மத்திய அமைச்சர் !!
பெட்ரோல் விலை உயர்வு என்பது 45 ஆண்டு கால பிரச்சனை என்றும், பெட்ரோல் விலையை குறைப்பது என்பது மத்திய அரசின் கையில் இல்லை என்றும் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்
பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இது அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதித்து வருகிறது.
இந்த விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டங்களில் இறங்கி உள்ளன. குறிப்பாக காங்கிரஸ் கட்சி வரும் திங்கட்கிழமைநாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து உள்ளது. இதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.
இந்த நிலையில், டெல்லியில் நடந்த பசுமை எரிபொருள் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, பெட்ரோல்,டீசல் விலை உயர்வு பிரச்சினை 45 ஆண்டு கால பிரச்சினை என்று தெரிவித்தார்.
மேலும் சுரேஷ் பிரபு கூறும் போது, "எண்ணெய் விலை உயர்வு விவகாரம் 45 ஆண்டுகளுக்கு முன் முதன்முதலாக உருவெடுத்தது. அந்தவகையில் இது 45 ஆண்டுகால பிரச்சினை ஆகும். எனவே இந்த பிரச்சினையை சமாளிக்க எரிபொருள் ஆதாரத்தை மாற்றியமைப்பது குறித்து நீண்ட காலத்துக்கு முன்பே இந்தியா சிந்தித்து இருக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது என்பது மத்திய அரசின் கையில் இல்லை என்றும், எண்ணெய் நிறுவனங்கள் தான் பெட்ரோல்,டீசல் விலையை நிர்ணயம் செய்ய முடியும் என்று தெரிவித்தார்.