எனக்கா முதுகெலும்பில்லை ? டி.ஆர்.பாலுவுக்கு அதிரடி பதில் அளித்த ஓ.பி.ரவீந்திரநாத் !!
நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில்தான் நாடாளுமன்றத்தில் பேசினேன். எனக்கு முதுகெலும்பு இல்லையா என டி.ஆர்.பாலு கேட்டதைப் பற்றி எனக்கு கவலை இல்லை என துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் பதிலடி கொடுத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு 370- மற்றும் 35A நீக்கும் மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதலை பெற்று, மத்திய அரசு நீக்கியது.
இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் அறிவித்தார். மேலும் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்படும் என அறிவித்தார்.
மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா குறித்த விவாதத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசும் போது ஓபிஎஸ் மகனும் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் குமார் குறுக்கிட்டார்.
அதற்கு திமுக எம்.பி. டி.ஆர் பாலு இது முதுகெலும்பு உள்ளவர்கள் பேசும் இடம்; உங்களுக்கு முதுகெலும்பு இல்லை; உட்காருங்கள்” என்று ஆவேசமாக கூறினார். இது அதிமுகவினரை ஆத்திரமடையச் செய்தது.
இந்நிலையில் டி.ஆர்,பாலுவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள ரவீந்திரநாத், டி. ஆர். பாலு விமர்சித்ததை பெரிதாக எடுத்துக்கொள்ளவிலை. நாட்டின் உரிமைக்காகத் தான் நான் குரல் கொடுத்தேன். இதுபோன்ற விமர்சனங்களை பெரிதாக எடுத்து கொள்வது இல்லை என தெரிவித்தார்.
இதுபோன்று பேசுவது குறித்து கருத்தை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். பிரதமர் மோடி இந்தியாவை புதிய இந்தியாவாக கட்டமைப்பதில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார். பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சிக்காக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு என்றும் ஆதரவாக இருப்பேன் என தெரிவித்தார்.