பாஜகவுடன் ஒட்டோ உறவோ கிடையாது... நாங்க வேற, அவுங்க வேற... அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் அதிரடி!
1972-ம் ஆண்டில் எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய போது 13 லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்கள் இருந்தனர். ஜெயலலிதா காலத்தில் அந்த எண்ணிக்கை ஒன்றரை கோடியாக அதிகரித்தது. அதிமுக வளர்ச்சி அடைந்தது.
பாஜவுடன் கொள்கை ரீதியாக அதிமுகவுக்கு ஒட்டோ உறவோ கிடையாது என அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
நாங்கு நேரி இடைத்தேர்தல் பிரசாரத்தில் பங்கெடுக்க அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி நெல்லையில் முகாமிட்டுள்ளார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். “1972-ம் ஆண்டில் எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய போது 13 லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்கள் இருந்தனர். ஜெயலலிதா காலத்தில் அந்த எண்ணிக்கை ஒன்றரை கோடியாக அதிகரித்தது. அதிமுக வளர்ச்சி அடைந்தது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் அதிமுகவை ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் வழி நடத்திவருகிறார்கள். இருவரும் ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் போல் செயல்பட்டு கட்சியை வழிநடத்துகிறார்கள். பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் தேர்தல் கூட்டணி மட்டுமே உள்ளது. பாஜகவும் அதிமுகவும் மாறுபட்ட கொள்கைகளையும் கருத்துகளையும் கொண்ட கட்சிகள். எனவே அக்கட்சியுடன் அதிமுகவுக்கு கொள்கை ரீதியாக எந்த ஒட்டும் உறவும் கிடையாது.
தமிழக மக்களின் நலனை பாதிக்கும் எந்தத் திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தாலும் அதை அதிமுக எதிர்க்கும். எங்களுடைய எதிர்ப்புக் குரல் நிச்சயமாக ஒலிக்கும்” என்று கேபி. முனுசாமி தெரிவித்தார்.