பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு டிரைவிங் லைசென்ஸ் இல்ல… பென்சன் இல்ல !! முதலமைச்சர் அதிரடி…
அரியானா மாநிலத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வாகன உரிமம், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் அதிரடியாக அறிவித்துள்ளார்.
அரியானா மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல வழிகளில் முயற்சி செய்து வருகிறது.
அரியானாவில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோம் மீது சட்டத்தின் மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களது வாகன உரிமம், துப்பாக்கி உரிமம், வயதானவர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான ஓய்வூதியம்போன்றவை ரத்து செய்யப்படும் என அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.
பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கின் தீர்ப்பு வரும் வரையில், அவர்களுக்கு இந்த வசதிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும், வழக்கு விசாரணை முடிவில் அவர் குற்றவாளி என நிரூபணமாகி, தண்டனை வழங்கப்பட்டால் இழந்த சலுகைகளை அவர்களால் நிரந்தரமாக பெற முடியாது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம் வரும் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அல்லது ரக்ஷா பந்தன் தினமான ஆகஸ்ட் 26 அன்று தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காவல்நிலையத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம் மற்றும் ஈவ்டீசிங் வழக்குகள் இனி தடையின்றி விசாரிக்கப்படும் என்றும் விசாரணை அதிகாரிகள் பாலியல் குற்ற வழக்கு விசாரணையை 1 மாதத்திலும் மற்றும் ஈவ்டீசிங் வழக்கு விசாரணையை 15 நாட்களிலும் விரைந்து முடிக்க வேண்டும் என்றும் இதற்காக பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்ற நீதிபதிகளை விரைவில் சந்திக்கவுள்ளதாகவும் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.