முரசொலி நில விவகாரமா ? என்ன ஆள விடுங்கப்பா ! நைஸாக நழுவிய ஓபிஎஸ் !!
முரசொலி நில விவகாரம் ஒரு முடிந்துபோன பிரச்சினை என்றும் அது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'அசுரன்' திரைப்படத்தை சமீபத்தில் பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின், படக்குழுவினரை பாராட்டியதுடன், "அசுரன் படம் மட்டுமல்ல பாடம். பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்" என தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.
இதற்கு பதிலடியாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த பாமக நிறுவனர் ராமதாஸ், "அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்" என குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு பதில் அளித்த ஸ்டாலின், முரசொலி இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று ராமதாஸ் நிரூபித்தால், அரசியலை விட்டு விலகத் தயார் எனவும், ராமதாஸ் நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால் அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா? என கேள்வி கேட்டிருந்தார். அத்துடன், முரசொலி அலுவலகத்துக்கான பட்டாவையும் இணைத்து டுவிட்டரில் பதிவிட்டார்.
இந்த விவகாரம் கடந்த சில தினங்களாக தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறிப்போனது. இந்த நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் இரு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஓபிஎஸ் “முரசொலி நில விவகாரம் முடிந்துபோன பிரச்சினை, அது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. நாடு முழுவதும் பஞ்சமி நிலங்கள் பல்வேறு கட்டிடங்களாக உருவாக்கப்பட்டுள்ளது, இதற்குரிய தீர்வு அரசின் பரிசீலனையில் உள்ளது” என்று கூறி எஸ்கேப்பானார்.