மோடி அரசு அடுத்து விற்கப்போவது இந்த துறையைத் தான் !! பிரியங்கா காந்தி அதிரடி பேச்சு !!
பாஜக அரசு ரெயில்வே துறையை மிக மோசமான நிலைக்கு கொண்டு வந்துள்ளது என்றும் சில நாட்களுக்குப் பிறகு, மற்ற அரசு நிறுவனங்களைப் போலவே ரெயில்வே துறையையும் மோடி அரசு விற்கத் தொடங்கும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 18ம் தேதி தொடங்கி இந்த மாதம் 13ம் தேதி வரை நடைபெறுகிறது.
நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட இந்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலர் அறிக்கையில், இந்திய ரெயில்வே 2017-18 ஆம் ஆண்டில் 98.44 சதவீத இயக்க விகிதத்தை பதிவு செய்துள்ளது.
இது முந்தைய 10 ஆண்டுகளில் மிக மோசமான விகிதமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இயக்க விகிதம் என்பது தேசிய போக்குவரத்து கழகம் ஒவ்வொரு ரூபாயையும் சம்பாதிக்க செலவழிக்கும் பணமாகும். இந்த விகிதம் குறைவாக இருக்கும் நிலையில் ரெயில்வே நிர்வாகம் சீராக உள்ளது எனலாம்.
இந்நிலையில், உருவாக்குவதில் அல்ல விற்பனை செய்வதில்தான் பாஜக திறமை வாய்ந்தது என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அந்த அரசை குற்றம்சாட்டியுள்ளார்.
ரெயில்வே துறை நாட்டின் உயிர்நாடியாகும். இப்போது, பாஜக அரசு ரெயில்வே துறையை மிக மோசமான நிலைக்கு கொண்டு வந்துள்ளது.
சில நாட்களுக்குப் பிறகு, மற்ற அரசு நிறுவனங்களைப் போலவே ரெயில்வே துறையை விற்கத் தொடங்கும். இந்த அரசாங்கம் உருவாக்குவதில் அல்ல விற்பனை செய்வதிலேயே திறமையானது’ என பிரியங்கா காந்தி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.