19 ஆம் தேதி 1 லட்சம் பேருடன்...!! முதலமைச்சர் எடப்பாடியை பணிய வைக்க எம்எல்ஏ ஆன்சாரி போட்ட பயங்கர பிளான்..!!
பிப்ரவரி 19 அன்று 1 லட்சம் பேருடன் சட்டமன்றத்தை முற்றுகையிட உள்ளோம். இன்னும் 48 மணி நேரம் அவகாசம் உள்ளது. நீங்கள் சட்டமன்றத்தில் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் நாங்கள் போராட்டத்தை ரத்து செய்கிறோம்.
தேவையற்ற பேச்சுகள், முழக்கங்களை தவிர்க்க வேண்டும் என வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்லாமிய மக்களுக்கு மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வேண்டுகோள் விடுத்துள்ளார். வண்ணாரப்பேட்டையில் போலிஸின் அத்துமீறலை கண்டித்து சட்டமன்றத்திற்கு பதாகை ஏந்தி வந்திருந்த அன்சாரி, சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை முன்மொழிந்தார், இவ்விவாகரம் தொடர்பான கருத்துகளை, மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி ஆணித்தரமாக எடுத்துரைத்தார். ஆனால் முதல்வரின் பதில் திருப்தியளிக்கவில்லை என்று கூறிவிட்டு, வெளிநடப்பு செய்த அவர், தங்கள் உணர்வு நிராகரிக்கப்பட்டதால், பிப் 19 அன்று 1 லட்சம் பேருடன் சட்டமன்றத்தை முற்றுகையிடுவோம் என அறிவித்தார்.
பின்னர் அங்கிருந்து வண்ணாரப்பேட்டை ஷாஹின் பாக் " போராட்ட களத்துக்கு சென்ற அவர் போராட்டக்காரர்கள் மத்தியில் பேசியதாவது, உங்கள் மீதான வன்முறைகளை கண்டித்து, சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசினேன். முதல்வர் அவர்கள் அதிகாரிகள் எழுதி கொடுத்ததை பேசி, தவறான தகவலை அவைக்கு கொடுத்தார் அதனால் அதை கண்டித்து வெளிநடப்பு செய்து விட்டு, நேராக இங்கே வந்துள்ளேன். இங்கு போக்குவரத்துக்கு தொந்தரவு இல்லாமல் , தங்கள் வீதிக்குள் மக்கள் போராடுகிறார்கள். குழந்தைகளோடு பெண்கள் களமாடுகிறார்கள். இது வலிமை மிக்க மக்கள் எழுச்சியாகும். போக்குவரத்துக்கு தொந்தரவு இல்லாமல், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் கண்ணியமாக உரிமைகளுக்காக போராடுகிறீர்கள். உங்களை அத்துமீறி காவல்துறை தாக்கியதும், இரவு 10 மணி, 11 மணி என்று கூட பாராமல் தமிழகமெங்கும் 300 க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்கள் பரவியது. அந்த அளவிற்கு இப்போராட்டம் பல மிக்கதாக மாறிவிட்டது.
சாமானிய மக்கள், தொழிலாளர்கள், ஏழைகள் போராடுகிறீர்கள். உங்கள் உணர்வுகளை மத்திய, மாநில அரசுகள் மதிக்க வேண்டும். நாம் 2024 மே மாதம் வரை கூட போராட வேண்டி வரும். வடிவங்கள் மாறலாம். போராட்டம் தொடரும். எனவே யாரும் நிதானம் இழக்க கூடாது. உணர்ச்சி வசப்படக் கூடாது. யாராவது சீண்டினால் , சகித்துக் கொண்டு போராட பழக வேண்டும்.சிலர் நம்மிடமிருந்து வன்முறையை எதிர்பார்க்கிறார்கள். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொறுமையை கையாள வேண்டும். இங்கு போராட்ட குழுவுக்கு ஒரு அன்பான வேண்டுகோளை முன் வைக்கிறேன். இங்கு உணர்ச்சி வசப்பட்டு, யாரையும் புண்படுத்தும் வகையில் பேச அனுமதிக்காதீர்கள். யார் மனதையும் காயப்படுத்தி விடக் கூடாது.தனி நபர் விமர்சனங்கள் வேண்டாம். கோரிக்கையை மட்டுமே முன்னிறுத்தி பேச சொல்லுங்கள்.
தவறான முகம் சுழிக்கும் முழக்கங்களை எழுப்ப அனுமதிக்காதீர்கள். முழக்கங்களை வாங்கி படித்து சரி பார்த்து விட்டு பிறகு அனுமதியுங்கள். தொடர்ந்து அமைதி வழியில் தொடர்ந்து போராடுவோம்.இந்துக்கள், முஸ்லிம்கள், கிரித்தவர்கள், தலித்துகள் நம்மோடு இணைகின்றனர். மதத்தால் பிரிக்க நினைத்தவர்கள் தோற்றுவிட்டனர்.தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறோம். பிப்ரவரி 19 அன்று 1 லட்சம் பேருடன் சட்டமன்றத்தை முற்றுகையிட உள்ளோம். இன்னும் 48 மணி நேரம் அவகாசம் உள்ளது. நீங்கள் சட்டமன்றத்தில் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் நாங்கள் போராட்டத்தை ரத்து செய்கிறோம். நாங்கள் மிரட்டவில்லை. வேண்டுகோளை தான் முன் வைக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.