எம்.பி. சின்ராஜ்க்கு அமைச்சர் தங்கமணி கடும் எச்சரிக்கை... அத்துமீறினால் நடவடிக்கை நிச்சயம்..!
தன் அதிகார எல்லை தெரியாமல் காவல் நிலையத்துக்கு சென்று திமுக எம்.பி. சின்ராஜ் தகராறு செய்கிறார். அதனுடைய பாதிப்பை அவர்தான் அனுபவிப்பார் என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
தன் அதிகார எல்லை தெரியாமல் காவல் நிலையத்துக்கு சென்று திமுக எம்.பி. சின்ராஜ் தகராறு செய்கிறார். அதனுடைய பாதிப்பை அவர்தான் அனுபவிப்பார் என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் அரசு சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி பங்கேற்றார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தமிழகத்தில் 2 முறை முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு, முதலீடு பெறப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்று முதலீட்டாளர்களை சந்திக்கும்போது இன்னும் அதிக முதலீடு வர வாய்ப்பிருக்கிறது. சுகாதார துறை சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளில் இன்னும் அதிக முதலீடு வர வாய்ப்புள்ளது. எதிர்கட்சிகளை பொறுத்தவரை வேறு காரணம் எதுவும் அரசை எதிர்ப்பதற்கு இல்லாததால் முதலமைச்சர் வெளிநாட்டு பயணத்தை குறை கூறுகின்றனர்.
தொடர்ந்து மணல் கடத்தும் லாரிகளை நாமக்கல் தி.மு.க எம்.பி சின்ராஜ் பிடித்து வழக்கு பதிவு செய்வது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் ``நான் முன்பே கூறியதுபோல் மணல் கடத்தல் நடைபெறவில்லை. எம்.பி மணல் கடத்தியதாக 2 லாரிகள் பிடிக்கப்பட்டன. கரூரிலிருந்து வாங்கலுக்கு மணல் ஏற்றிச் சென்ற லாரி, திருச்சியில் அரசு மணல் குவாரியில் முறைகேடாக மணல் ஏற்றிச் சென்றுள்ளது. அதன் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
இருந்தாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். அதேபோல சட்டவிரோத செயலை கண்டிக்கவும் அவருக்கு உரிமை உண்டு. ஆனால் அவர் போலீஸ் நிலையத்துக்கு சென்று மணல் லாரி டிரைவரை நான் விசாரிக்க வேண்டும் என்று கூறி தகராறு செய்துள்ளார். இது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிக்கு அழகல்ல. சட்டம் தன் கடமையை செய்யும். தன் அதிகார எல்லை தெரியாமல் போலீஸ் நிலையத்துக்கு சென்று தகராறு செய்கிறார். அதனுடைய பாதிப்பை அவர்தான் அனுபவிப்பார் என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.