மகாராஷ்ட்ராவில் பாஜக ஆட்சி அமைக்க பின்னணியில் இருந்து சரத் பவாரா ? சிவசேனா, காங்கிரஸ் கட்சிகளை ஏமாற்றினாரா ? திடுக் தகவல் !!
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் பட்னாவிஸ் தலைமையில் ஆட்சி அமைய அஜித் பவாருக்கு சரத் பவார்தான் ஒப்புதல் அளித்து உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது..
மகாராஷ்ட்ரா சட்டசபைக்கு கடந்த மாதம் 21ந்தேதி தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலின் முடிவு பெரும் அரசியல் மாற்றத்துக்கு வித்திட்டது. ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில், பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி 161 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.
எனினும், கூட்டணி கட்சிகளுக்கு இடையே அதிகார பகிர்வில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால், எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. இதனால் கடந்த 12ந்தேதி மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல் ஆனது.
இந்த நிலையில் பாஜகவுடன் சுமார் 30 ஆண்டு கால கூட்டணி உறவை முறித்துகொண்ட சிவசேனா தனது தலைமையில் புதிய அரசு அமைப்பதற்காக காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.நேற்று மாலை 3 கட்சி தலைவர்களும் ஆட்சி அமைப்பது குறித்து இறுதி முடிவு எடுக்க தென்மும்பையில் உள்ள நேரு அரங்கத்தில் சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் புதிய அரசு அமைக்க மூன்று கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டு உள்ளது. எனவே அரசுக்கு தலைமை வகிப்பது யார்? என்ற பிரச்சினை முடிவுக்கு வந்து விட்டது. இனி மற்ற விஷயங்கள் குறித்து பேசப்படும்” என்றார்.
இந்த நிலையில், மகாராஷ்ட்ராவில் திடீர் திருப்பம் ஏற்பட்டு, அம்மாநில முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சராக அஜித் பவார் இன்று காலை பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் பகத்சிங் கோசியாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார். அவர்களுக்கு பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.
தொடர்ந்து அரசியலமைப்பின் 356 (2) பிரிவின் கீழ் மகாராஷ்ட்ராவில் ஜனாதிபதி ஆட்சி திரும்ப பெறப்பட்டதற்கான அறிவிப்பினை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக சரத் பவார் இருந்து வருகிறார். அக்கட்சியின் நாடாளுமன்ற வாரிய தலைவராக அஜித் பவார் இருந்து வருகிறார். எனவே, சரத் பவாரின் ஒப்புதல் இன்றி தேசியவாத காங்கிரஸ் கட்சியில் எந்த முடிவும் எடுக்கப்பட முடியாது.
அதனால் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைப்பதற்கான ஆலோசனையில் சரத் பவாரும் இருந்துள்ளார் என்றும் அஜித் பவாரிடம் அதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளார் என்றும் கூறப்படுகிறது.