மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுமதி !! மத்திய அமைச்சரவை ஒப்புதல் ….
மதுரை தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து 1258 கோடி ரூபாயில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டு 45 மாதங்களிவ் செயல்படத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுளளது.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அந்த அறிவிப்பு உறுதிபடுத்தப்படாமலேயே இருந்து வந்தது. தமிழகத்தில் எங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுகிறது? என்பது குழப்பமாக இருந்து வந்தது. அதை உறுதிபடுத்த வேண்டும் என்று தொடர்ந்து பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஜூன் 20-ந் தேதி தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் உள்ள தோப்பூரில் அமைய இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.1258 கோடி மதிப்பீட்டில் மதுரையில் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு 45 மாதங்களில் மதுரையில் எய்ம்ஸ் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்ததற்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரிகள் ஜே.பி.நட்டா, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நன்றி தெரிவித்து டுவீட் செய்துள்ளார்.