மத்திய பிரதேசத்தில் நாளைக்குள் பலத்தை நிரூபிக்கணும்.. இல்லை பதவி காலியாகிடும்.. கமல்நாத்துக்கு ஆளுநர் வார்னிங்
காங்கிரஸ் ஆட்சியைக் காப்பாற்றும் கமல்நாத்தின் முயற்சிக்கு சற்று அவகாசம் கிடைத்துள்ளது. ஆனால், பாஜக சார்பில் உச்ச நீதிமன்றத்தின் கதவு தட்டப்பட்டுள்ளது. கமல்நாத் அரசு உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் சவுகான் மனு தாக்கல் செய்துள்ளார்.
சட்டப்பேரவையில் தனது பலத்தை நாளைக்குள் நிரூபிக்காவிட்டால் ஆட்சியை இழக்க நேரிடும் என்று மத்திய பிரதேச முதல்வருக்கு மாநில ஆளுநர் எச்சரித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்து வந்த ஜோதிராதித்ய சிந்தியா கடந்த 10-ம் தேதி அதிருப்தியின் காரணமாக கட்சியில் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியமானார். அவரது ஆதரவாளர்களாக இருந்து வந்த 6 அமைச்சர்கள் உள்ளிட்ட 22 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது.
இந்நிலையில், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தும்படி கமல்நாத்துக்கு ஆளுநர் உத்தரவிட்டார். அதன்படி பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று ஆளுநர் உரையாற்றிய பின்னர், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என பாஜக எம்எல்ஏக்கள் முழக்கம் எழுப்பி வலியுறுத்தி வந்தனர். ஆனால், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாமல் சட்டப்பேரவை 26-ம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
இதன்மூலம் காங்கிரஸ் ஆட்சியைக் காப்பாற்றும் கமல்நாத்தின் முயற்சிக்கு சற்று அவகாசம் கிடைத்துள்ளது. ஆனால், பாஜக சார்பில் உச்ச நீதிமன்றத்தின் கதவு தட்டப்பட்டுள்ளது. கமல்நாத் அரசு உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் சவுகான் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கிடையே சட்டப்பேரவையில் தனது பலத்தை நாளைக்குள் (17-ம் தேதி) நிரூபிக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் ஆட்சியை இழக்க நேரிடும்” என்று முதல் கமல் நாத்துக்கு மத்திய பிரதேச ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார். இதனால், மத்திய பிரதேச அரசியலில் பரபரப்பு நீடித்துவருகிறது.