ஒன்றரைக் கோடி நில அபகரிப்பு …. 20 லட்சம் ரூபாய் லஞ்சம்…. மாட்டிக் கொண்ட பெண் சார் பதிவாளர் அதிரடி கைது !!
சென்னையில் ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை 20 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு போலி ஆவணங்கள் தயாரித்து அபரிக்க உதவி செய்த சார் பதிவாளர் சிவ பிரியா அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
சென்னை பள்ளிக்கரணை காமகோடி நகரில் 3,352 சதுர அடி காலி நிலம் உள்ளது. இந்த நிலத்தின் உரிமையாளர் சொக்கலிங்கம் 1995-ம் ஆண்டு இறந்துவிட்டார். கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் சைதாப்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஜீவன் பவுண்டேசன் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் பெரியசாமி என்பவருக்கு, இந்த நிலத்தை சொக்கலிங்கம் தனது நிலத்தை எழுதி கொடுத்ததாக, போலி ஆவணம் தயாரிக்கப்பட்டு நிலம் அபகரிக்கப்பட்டுவிட்டதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது.
இந்த புகார் மனு அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.
அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் கணேசமூர்த்தி, துணை கமிஷனர் மல்லிகா, உதவி கமிஷனர் ராஜேந்திரகுமார் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தர்மா வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.
இந்த வழக்கில் ரூ.20 லட்சத்தை பெற்றுக்கொண்டு போலியாக ஆவணத்தை உருவாக்கி, அந்த நிலத்தை பதிவு செய்து, அதை அபகரிக்க உதவியதாக சார்பதிவாளர் சிவப்பிரியா கைது செய்யப்பட்டார்.
சென்னை மயிலாப்பூர் அருண்டெல் தெருவில் குடும்பத்துடன் வசித்து வரும் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து1½ கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டுள்ளது.