சினிமாவில் ஹீரோ என்கவுண்டர் செய்தால் மட்டும் தான் பாராட்டுவீங்களா..? கொதிக்கும் ஜெகன் மோகன் ரெட்டி..!
பெண் மருத்துவர் ப்ரியங்கா ரெட்டி கற்பழித்து எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீஸார் என்கவுண்டர் செய்தது சரிதான் சுட்டு கொன்றது சரிதான் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெண் டாக்டர் ப்ரியங்கா ரெட்டி கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே 4 பேரை என் கவுண்டரில் போலீசார் சுட்டுக்கொன்றனர். இதையடுத்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவுக்கும் போலீசாருக்கும் பலர் பாராட்டு தெரிவித்தனர்.
ஆனால் என்கவுண்டரில் 4 பேர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புகளும் கிளம்பின. இந்நிலையில் இந்த என்கவுண்டருக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஆந்திர சட்ட சபையில் பேசும்போது, ’’இரண்டு மகள்களின் தந்தை என்ற முறையிலும், ஒரு கணவராக, ஒரு சகோதரராக ஐதராபாத் சம்பவம் என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது.
தெலுங்கானா சம்பவத்தை ஊடகங்கள் தீவிரமாக சுட்டிக்காட்டின. மக்களின் உணர்வையும் பெற்றோர் உணர்வையும் ஏற்று தெலுங்கானா அரசு பதிலடியாக என் கவுண்டரை செய்துள்ளது. இந்த நடவடிக்கைக்காக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், போலீசாருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதில் மனித உரிமை மீறல் ஏற்பட்டதாக கூறுவதை ஏற்க முடியாது. திரைபடத்தில் ஹீரோ என் கவுண்டர் செய்தால் கைதட்டி பாராட்டுகிறார்கள். அதை நிஜ வாழ்க்கையில் செய்தால் கேள்வி எழுப்புகிறார்கள். டெல்லி இளம்பெண் கற்பழித்து கொல்லப்பட்ட பிறகு நிர்பயா சட்டம் அமலுக்கு வந்தது. ஆனால் 7 ஆண்டுகளுக்கு பிறகும் குற்றவாளிகளுக்கு இன்னும் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. பெண்களுக்கு எதிராக குற்றங்களில் 3 வாரங்களுக்குள் தண்டனை நிறைவேற்ற வேண்டியது அவசியம்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக வழக்குகளை விரைந்து விசாரிப்பதை உறுதி செய்யவும் குற்றவாளிகளுக்கு தக்க தண்டணை வழங்கிடவும் சட்ட மசோதா விரைவில் சட்டசபையில் நிறைவேற்றப்படும்’’என அவர் தெரிவித்தார்.